விருத்த மேடை - 40
எழுசீர் விருத்தம் - 3
மா + மா + மா + மா
மா + மா + மா
கள்ளுந் தேனும் மொழுகுங் குவளைக்
கமழ்பூ நெரித்து வாங்கிக்
கிள்ளை வளைவா யுகிரிற் கிள்ளித்
திலகந் திகழப் பொறித்துத்
தெள்ளும் மணிசெய் சுண்ணம் மிலங்கத்
திருநீர் நுதலின் னப்பி
உள்ளம் பருகி மதா்த்த வாட்கண்
உருவம் மையிற் புனைந்தாள்
[சீவக சிந்தாமணி, இலக்கணையாரிலம்பகம் - 62]
மானம் போற்று! [பாரதியின் புதிய ஆத்திசூடி]
உண்ணும் உணவும் உடுத்தும் உடையும்
உடலைக் காக்கும்! நம்மின்
கண்ணும் கையும் கருணை கமழக்
கவலை போக்கும்! சிந்தை
எண்ணும் எண்ணம் ஏந்தும் மானம்
இன்பம் பூக்கும்! அமுதப்
பண்ணும் பாட்டும் பகரும் தமிழே
பண்பைச் சேர்க்கும்! தோழா!
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுமாச்சீர்கள் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும்.
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.08.2020

Aucun commentaire:
Enregistrer un commentaire