vendredi 28 août 2020

விருத்த மேடை - 38

விருத்த மேடை - 38
  
எழுசீர் விருத்தம் - 1
  
விளம் + மா + விளம் + மா
விளம் + விளம் + மா
  
அன்னமும் மீனும் ஆமையும் அரியும்
   ஆயஎம் மாயனே அருளாய்
என்னுமின் தொண்டர்க் கின்னருள் புரியும்
   இடவெந்தை யெந்தை பிரானை
மன்னுமா மாட மங்கையர் தலைவன்
   மானவேல் கலியன்வா யொலிகள்
பன்னிய பனுவல் பாடுவார் நாளும்
   பழவினை பற்றறுப் பாரே!
  
[பெரிய திருமொழி 2-8-10. திருமங்கையாழ்வார்]
  
பெரிதினும் பெரிதுகேள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]
  
ஓங்கிய வண்ணம் உயர்வுறும் எண்ணம்
   உனக்கிணை யிலையெனும் வாழ்வு!
தாங்கிய கொள்கை தரணியை யாளத்
   தனிப்பெரும் புகழொளிர் மாட்சி!
வீங்கிய மறமும் விரிகதிர் அறமும்
   விளைந்திட வெற்றிமேல் வெற்றி!
ஏங்கிய நிலையேன்? என்னுயிர்த் தோழா!
   ஏறிடும் படிநிலை காண்க!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
மேற்கண்ட பாடலில் ஒவ்வோரடியிலும் ஏழுசீர்கள் உள்ளன. விளம் + மா + விளம் + மா + விளம் + விளம் + மா என்ற வாய்பாட்டில் அமைந்துள்ளன. இவ்வாறு நான்கடிகளும் அமைய வேண்டும். நான்கடிகளும் ஓரெதுகை பெறவேண்டும். ஒன்று, ஐந்தாம் சீர்களில் மோனை அமைய வேண்டும். விளச்சீர் வருமிடங்களில் அருகி மாங்காய்ச்சீர் வருவதுண்டு.
  
ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எழுசீர் விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
           
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
24.07.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire