mercredi 9 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
ஆட்சி மன்றமும் மனநோய் மருத்துவ மனையும்
  
காவலுறும்! நற்றலைவர் காப்புறும்! மந்திபோல்
தாவலுறும்! சண்டைக் களமாகும்! - கூவலுறும்!
கூச்சலுறும்! நாவுளறும்! கோலுடையும்! ஆளுமிடம்
காட்சியுறும் பித்திடமாய்க் காண்!
  
ஆட்சி மன்றம்
  
ஆட்சி மன்றத்தில் காவலர் பணிபுரிவார். அவைத்தலைவர் இருப்பார். உறுப்பினர்கள் கட்சி மாறுவார். சண்டை செய்வார். கத்துவார். இரைச்சலிடுவார். உளறுவார். அங்குள்ள பொருள்களை உடைப்பார்.
  
மனநோய் மருத்துவமனை
  
மனநோய் உள்ளவர்களைக் காத்திடப் பலர் இருப்பார். தலைவராக மருத்துவர் இருந்து காப்பார். மனநோய் கொண்டோர் அங்கும் இங்கும் தாவி ஓடுவார். சண்டை செய்வார். கத்துவார். இரைச்சலிடுவார். உளறுவார். அங்குள்ள பொருள்களை உடைப்பார்.
  
எனவே, ஆட்சி மன்றமும், மனநோய் மருத்துவமனை ஒன்றாகும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
09.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire