mercredi 2 janvier 2019

ஆண்டின் முதனாள்!


ஆண்டின் முதனாள்!
  
முத்தான முதல்..நாள்!
வாழ்வின்
முதலைத் தரும்..நாள்!
  
சுற்றிச் சுற்றி
உழைத்த பூமியின்
வெற்றித் திருநாள்!
  
கால ஏட்டின்
முதல் பக்கம்!
கவிதை படர்கிறது!
கனவு தொடர்கிறது!
  
தொடக்கம் எங்கே?
அடக்கம் அங்கே!
உயர்நெறியை,
உயிர்நெறியை,
உணர்த்தும் ஒளிநாள்!
  
படைப்பின் மாட்சியை,
பரமன் ஆட்சியை,
உரைக்கும் பொன்னாள்!
  
தன்னலத்தால் சுற்றும்
தசைப்பந்து!
தன்னலமின்றிச் சுற்றும்
விசைப்பந்து!
தன்னலம் நீக்கு!
மண்ணலம் நோக்கு!
  
வட்டப் பாதையில்
சட்ட ஒழுங்குடன்
விட்டவர் யாரோ?
இப்புவிதான்
இறைவன் செல்லும் தேரோ?
  
வார முதனாள்
வேலை தொடக்கம்!
மாத முதனாள்
மகிழ்ச்சி கிடைக்கும்!
ஆண்டின் முதனாள்
அருளை உணர்த்தும்!
  
மண் பிறந்த நாளாய், - பள்ளி,
கண் திறந்த நாளாய்,
பெண் மணந்த நாளாய், - பிள்ளைப்
பண் அணிந்த நாளாய்,
இந்நாளை ஏற்பாய்!
நன்னெறியை
எந்நாளும் காப்பாய்!
  
முன் ஆண்டில் முட்டிய
தடைகளை,
உடைக்கும் உறுதியுடன்
படைகளை
உள்ளத்துள் கூட்டு!
உயர்வினை நாட்டு!
  
முடியாமை
நெஞ்சம்
படியாமை
ஏனென்ற கேள்வியிடு!
வெல்லும் வேள்வியிடு!
  
உயிர்க்கருணை
உலகம் செழிக்கும்!
உயிர்க்கொடுமை
உலகை அழிக்கும்!
  
அன்பே
அகிலத்தை இயக்கும் சக்தி!
மனிதம் பூக்கட்டும்!
மண்ணைக் காக்கட்டும்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire