lundi 7 janvier 2019

சிலேடை வெண்பா

சிலேடை வெண்பா
  
நாயும் குரங்கும்
  
வாலாட்டும்! சுற்றிவரும்! கோல்கவ்வும்! ஈக்காட்டும்!
காலெக்கி நிற்கும்! கடித்திழுக்கும்! - மேலேகும்!
ஆரமுறும்! ஆடையுறும், பின்தொடரும், கூண்டடையும்,
பேருமுறும், நாய்,குரங்குப் பீடு!
  
நாய்
  
வாலாட்டித் தன்னுணர்வைக் காட்டும். தன்னையே சுற்றும். நம்மையும் சுற்றும். கோலை வாயால் கவ்வி எடுத்துவரும். வெறியால் ஈயென்று முறைக்கும். இரண்டு கால்களைத் துாக்கி நம் மார்பில் வைத்து நிற்கும், நடக்கும். துணியையும், கறியையும், கடித்திழுக்கும். நம்மேல் பாயும். சில இல்லங்களில் நாய்க்கு, ஆரமும் ஆடையும் அணிவித்து மகிழ்வார்கள். காலை நடைப்பயிற்சியில் நம்முடன் பின் தொடர்ந்துவரும். அதன் கூண்டுக்குள் சென்று படுத்துக்கொள்ளும். பலர் அதனைப் பெயர்வைத்தும் அழைப்பார்கள்.
  
குரங்கு
  
வாலாட்டித் துள்ளும். நடக்கும். சுற்றி ஓடும். மரக்கிளையைப் பற்றித் தாவும். ஈயென்று முறைக்கும். நிமிர்ந்து நடக்கும். தேங்காய் மட்டையைக் கடித்து இழுக்கும். மரமேறும், அந்தரத்தில் பாயும். குரங்காட்டிகள், குரங்கிற்கு ஆரம், ஆடை அணிந்து அழைத்துச் செல்வார். அதற்குப் பெயரிட்டும் அழைப்பார். கண்காட்சியில் கூண்டுக்குள் இருக்கும்.
  
எனவே, நாயும் குரங்கும் ஒப்பாகும். இவ்வெண்பாவில் நாயுக்கும் குரங்கிற்கும் 13 ஒப்புமை வந்தன. எனவே பீடெனப் பாடல் நிறைவுற்றது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.01.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire