samedi 5 janvier 2019

சிலேடை வெண்பா


சிலேடை வெண்பா
  
பாம்பும் குரங்கு வாலும்!
  
நீண்டிருக்கும்! கோல்சுற்றும்! தீயேற்கும்! மண்தழுவும்!
துாண்டவெழும்! கண்டாய்ச் சுருள்கொள்ளும்! - வேண்டி
அதைத்தொட வாலுதவும்! நல்லிருக்கை யாகும்!
முதைப்பாம்பும் வாலும் மொழி!
  
பாம்பு
    
பாம்பு நீளமாய் இருக்கும். மரக்கிளையில் சுற்றித் தொங்கும். இறந்தபின் நெருப்பிட்டுக் கொளுத்தபடும். நிலத்தைத் தழுவித் செல்லும். நாம் அதைக் துாண்டினால் தலை துாக்கும். கூடையில் சுருண்டு கிடக்கும். வாலைப் பிடித்துத் துாக்குவார். அரங்கன் பள்ளியுறும் இருக்கை ஆகுமாம்.
  
வால்
  
குரங்கு வால் நீளமாக இருக்கும். மரக்கிளையில் சுற்றித் தொங்கும். இராமயாணத்தில் குரங்கு வாலில் தீயிட்டனர். குரங்கு வால் நிலத்தைத் தழுவிக்கிடக்கும். வாலைத் தொட்டால் புடைத்தெழும். சுருண்டும் இருக்கும். வாலைத் தொட்டுப் பார்ப்போம். இராவணன் முன் அனுமன் அமர, அதன்வால் இருக்கையாய் ஆனதாம்.
    
அதனால் மறைந்து வாழும் பாம்பும், குரங்கு வாலும் ஒப்பாகும் என்றே மொழிந்திடுவாய்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
05.01.2019

1 commentaire:

  1. சிறப்பான பாடலும் அதன் விளக்கமும். பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    RépondreSupprimer