mardi 10 juillet 2018

கோனேரிக் கூத்தா!


கோனேரிக் கூத்தா!
வானேறி ஏன் சென்றாய்?

  
கோத்த மணியாகக் கோலக் கவிதைகளை
யாத்த இசைக்கவியே எங்குற்றாய்? - கூத்தின்
இருப்பாய் இருந்தனையே! உன்பிரிவைக் கேட்டு
நெருப்பாய்க் கொதிக்கிறது நெஞ்சு!
  
கோனேரிக் கூத்தா! கொடுமுலகின் துன்பத்தால்
வானேறிச் சென்றாயோ? வாடுகிறேன்! - ஊனேறி
என்றன் உயிரேறி நீ..இருந்தாய்! சொல்லாமல்
இன்றேன் பிரிந்தாய் இயம்பு?
  
ஓங்கி ஒலித்த குரலெங்கே? ஒண்டமிழைத்
தாங்கித் தழைத்த தலையெங்கே? - வீங்கிப்
புகழ்கொண்ட தோளெங்கே? பொங்கியழும் எம்மூர்
அகங்கொண்ட அன்பால் அதிர்ந்து!
  
ஒப்பனை வண்ணங்கள் உன்நினைவால் இங்குருகும்!
இப்பனை மார்பனை ஏன்பிரிந்தோம்? - அப்பப்பா
கூத்திடம் குன்றும்!நம் கோனேரி பாட்டின்றிப்
பாத்திரம் காணும் பழி!
  
பேச நினைத்தேன் பெருங்கவியே உன்னோடு!
பாசக் குயிலே! பறந்தனையே! - மோசத்
துயரில் முழுகுகிறேன்! தோழா!உன் பேரை
உயிரும் முனங்கும் உடைந்து!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
10.07.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire