lundi 9 juillet 2018

வெண்டாழிசை - 5


வெண்பா மேடை - 76
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வந்த வெண்டாழிசை
  
மலர்விழியே!
  
1.
ஏங்கும் நினைவுகளை ஏவும் மலர்விழியே!
ஓங்கும் கனவுகளை ஊட்டுகிறாய்! வாடுகிறேன்
வீங்கும் ஆசை விளைந்து!
  
2.
வண்ணத் தமிழமுதை வழங்கும் மலர்விழியே!
எண்ணம் இனிக்க எழுதுகிறாய்! வாடுகிறேன்
விண்ணிகர் ஆசை விளைந்து!
  
3.
என்மேல் அம்புகளை ஏவும் மலர்விழியே!
பொன்மேல் பதித்த புதுமணியே! வாடுகிறேன்
உன்மேல் ஆசை விளைந்து!
  
4.
வேல்கொண்டு தாக்கும் விந்தை மலர்விழியே!
சூல்கொண்டு பாக்கள் சுரக்குதடி! வாடுகிறேன்
மேல்கொண்டு ஆசை விளைந்து!
  
5.
கூர்கொண்டு தாக்கும் கோல மலர்விழியே!
ஏர்கொண்டு என்னை உழுகின்றாய்! வாடுகிறேன்
வேர்கொண்டு ஆசை விளைந்து!
  
6.
வாள்கொண்டு தாக்கும் வல்ல மலர்விழியே!
நீள்கொண்டு தாக்கும் நிறையழகே! வாடுகிறேன்
வேள்கொண்ட ஆசை விளைந்து!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை. இவ்வாறு மற்றத் தளைகளிலும் மூன்றுக்கு மேல் வெண்டாழிசை அமையும்.
  
விரும்பிய பொருளில் ஒரு பொருண்மேல் மூன்றுக்கு மேல் அடிக்கி வெண்டளையுடன் வேற்றுத்தளை அருகி வந்த வெண்டாழிசை ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெள்ளொத்தாழிசையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
08.07.2018

1 commentaire: