mardi 11 mars 2014

சொல்லோவியம் - [பகுதி - 4]




சொல்லோவியம்

31.
ஏற்றத்தில் நீா்இறைக்க!
எனையெண்ணிப் பாட்டிசைக்க!
ஆற்றுக்குள் குளிக்குமெனை
அயிரமீனா நீ..கடிக்க!

32.
ஆலமர ஊஞ்சலிலே
ஆடியதை என்என்பேன்!
சூளையிடும் இடத்தினிலே
கூடியதைப் பொன்னென்பேன்!

33.
கத்தாழைக் காட்டுக்குள்
கணக்காக நின்றவனே!
சொத்தாக என்னழகைச்
சொந்தமிடும் தென்னவனே!

34.
எடுப்பாக நடைநடந்து
ஏக்கத்தைத் தொடுப்பவனே!
துடுக்காக எனைத்தொட்டுத்
தூக்கத்தைக் கெடுப்பவனே!

35.
மஞ்சளிலே உனைச்சோ்த்து
மார்பினிலே பூசுகிறேன்!
நெஞ்சினிலே உனைநிறைத்து
நிலையிழந்து பேசுகிறேன்!

36.
மடுக்கரையை அன்றொருநாள்
மதுக்கரையாய் ஆக்கினையே!
தொடுங்கலையை நன்கறிந்து
துயா்யாவும் போக்கினையே!

37.
ஐயனரின் சிலையாக
அழகொளிரும் உன்னுடம்பு!
தையலிடம் ஆசைகளைத்
தந்தொளிரும் பன்மடங்கு!

38.
ஆவாரச் செடியின்று
தாவணி தான்அணியும்!
நாவார நீ..பாடும்
பாவாரம் தேன்பொழியும்!

39.
பட்டபகல் என்றெண்ணிப்
பார்க்காமல் கேட்டவனே!
கட்டவண்டிப் பயணத்தில்
காதல்கவி நூற்றவனே!

40.
வெட்டரிவா மீசையினால்
வீழ்த்துகிற மன்னவனே!
கட்டுடலால் என்னுயிரைக்
கட்டுகிற கண்ணியனே!

(தொடரும்)

8 commentaires:

  1. சொல்லோவியம்
    அருமை
    இனிமை

    RépondreSupprimer
  2. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வணக்கம் !
    மெய்சிலிர்க்க வைக்கும் வார்த்தை ஜாலம்
    மேன்மையான கவி தொடுக்கும் உன்னைச் சேரும் ..!!
    வாழ்த்துக்கள் ஐயா
    அருவியாகத் தொடரும் சொல்லோவியம்
    அனைவர் அகத்திலும் நிறையட்டும் .

    (இன்றும் ஒரு காதல் கீதம் காத்திருக்கின்றது
    தங்கள் வரவுக்காகவும் .மிக்க நன்றி ஐயா
    தங்களின் கருத்துக்களிற்கு .)

    RépondreSupprimer
  4. சிறந்த சொல்லாடல்
    இனிய இசையோட்டம்
    வாசிக்கச் சுவை
    உள்ளத்தில் விருப்பம்
    தொடருங்கள் படிப்போம்

    RépondreSupprimer
  5. ஆவாரச் செடியின்று
    தாவணி தான்அணியும்!
    நாவார நீ..பாடும்
    பாவாரம் தேன்பொழியும்!

    ------------

    உங்கள் சொல்லாடல் அருமை ஐயா....
    சொல்லோவியம் அருமை...

    தொடருங்கள்... தொடர்கிறோம்...

    RépondreSupprimer
  6. தெம்மாங்கு பாட்டிற்க்காய்த்
    தேடியிங்கு வந்தேனே!
    வம்பின்றிப் போவதற்கு
    வாக்கினையும் அளித்தேனே!

    RépondreSupprimer

  7. சொல்லோ வியம்கண்டு சொக்குகிறேன்! நெஞ்சத்தை
    வெல்லோ வியம்கண்டு வேண்டுகிறேன்! - அள்ளித்தா
    பல்லோ வியம்மின்னும் பைந்தமிழ்ப் பாக்களை!
    நல்லோ வியக்கவியே நன்கு!

    RépondreSupprimer
  8. ரசித்தேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer