samedi 29 mars 2014

கனிவிருத்தம் - பகுதி 3



கலிவிருத்தம் () கனிவிருத்தம்

11.
அன்புக்கும் அளவில்லை! அறிவுக்கும் ஏதெல்லை!
பண்புக்கு நீ..பிள்ளை! பாட்டுக்கு நான்பிள்ளை!
வம்புக்கு வழியில்லை! வந்தாடு பொன்முல்லை!
கும்முக்குக் கன்னங்கள் கொழிக்கின்ற தமிழ்க்கொள்ளை!

12.
கண்ணுக்குள் நடமாடும் கவிப்பெண்ணே! இன்பமெனும்
விண்ணுக்குப் படியமைக்க வேண்டுமடி உன்னுறவு!
எண்ணுக்குள் கூட்டுவதும் பெருக்குவதும் என்னவளே
இன்பத்துள் நாம்காண்போம்! இளமையினை நாம்ஆள்வோம்!

13.
இனியென்ன நான்செய்ய? ஏறுதடி உச்சநிலை!
பனியென்ன நான்செய்ய? படருதடி கனவுநிலை!
கனியென்ன நான்செய்ய? கண்கவரும் அழகுநிலை!
பணியென்ன நான்செய்ய? பைத்தியமாய் ஆனநிலை!

14.
காற்றாகித் தழுவிடுக! கவியாகி இனித்திடுக!
ஊற்றாகிக் குதித்திடுக! உறவாகி இணைந்திடுக!
நாற்றாகி நடம்புரிக! நலமாகி நிலைத்திடுக!
ஈற்றாகி என்கவியில் எந்நாளும் இடம்பெறுக!

15.
நெஞ்சத்துள் நீ..புகுந்த நாள்முதலாய்ப் பெரும்போதை!
மஞ்சத்துள் கிடக்கின்றேன் வஞ்சித்துப் போகாதே!
கொஞ்சத்துள் மாறாத கொள்கைநிறை என்னுள்ளம்!
பஞ்சத்துள் அலைவதுபோல் உன்பார்வைக்கு ஏங்குதடி!

தொடரும்

12 commentaires:

  1. // இனியென்ன நான்செய்ய? // ரசிக்க மட்டும் எங்களால் முடியும் ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  2. கனவு நிலை இனித்திடட்டும்
    அருமை ஐயா நன்றி

    RépondreSupprimer
  3. வணக்கம் !
    இன்பக் கவிதை வடிக்கும் இனிய நாவினாலே
    ஈடில்லா நல் வாழ்த்தொன்று உரைக்க வாரீர் !
    சங்கத்தமிழைத் தொகுக்கும் அழகிய மனத்தாலே
    சாகா வரம் பெற்ற வாழ்த்தொன்று உரைக்க வாரீர்

    வாருங்கள் ஐயா வாழ்த்துச் சொல்லி மகிழலாம்
    தங்கள் மனம் போல் என் பாடல் வரிகளும் அரங்கில் ஏற !

    RépondreSupprimer
  4. தனித்திருக்கும் சூரியனின் தளராத ஒளியைப்போல்
    கனிவிருத்தம் காண்கின்றேன் காட்டாற்று வெள்ளம்போல்
    பனித்துளியின் ஈரத்தில் படர்கின்ற கொடியைப்போல்
    ஜனிக்கின்ற கவியெல்லாம் ஜடங்களுக்கும் உயிர்கொடுக்கும் !


    அருமை அருமை கவிஞர் அண்ணா
    இனிய வாழ்த்து வாழ்க வளமுடன்
    8

    RépondreSupprimer
  5. நெஞ்சத்துள் நீ..புகுந்த நாள்முதலாய்ப் பெரும்போதை!//ஆஹா பெரும் போதைதான்!ஹீ வாழ்த்துக்கள் ஐயா தொடர்கின்றேன்.

    RépondreSupprimer
  6. பயன்தரும்
    சிறந்த பாவரிகள் தொடராக மின்ன
    சின்னப் பொடியன் யாழ்பாவாணன்
    வாழ்த்துகிறார்.

    RépondreSupprimer
  7. பாட்டுத் திறத்தாலே
    போதை எமக்கேற்றி
    வாட்டமுறச் செய்யும்
    வழக்கத்தை எதிர்க்கின்றேன்!

    RépondreSupprimer
  8. பெண்ணென்ன வெறுங்கனியா? புசித்தவுடன் பசியாற?
    கண்ணென்ன கரும்பழமா? கடிசுவைத்துத் துப்பிவிட?
    பொன்னென்ற உடலழகா? பூட்டியதைப் பாதுபாக்க?
    என்னென்ன கவிபடைப்பீர்? எதைஅடைப்பீர் ஏட்டினிலே?


    RépondreSupprimer
  9. தஞ்சமென உன் நெஞ்சமதை
    அடைந்துவிட்டால் தமிழும்
    இனியென்ன வேண்டும் உமக்கு... என்ன சொல்ல மீண்டும் மீண்டும் படித்து மகிழ நினைக்கும் வரிகள்.

    RépondreSupprimer

  10. இனியென்ன நான்செய்ய? இன்பக் கவிதைகள்!
    கனியென்ன? கண்டென்ன? தோற்றோடும்! - பனியென்ன
    மிக்க குளிரா? மிகுசுவையை நெஞ்சுண்டு
    சொக்கிக் கிடக்கும் சுருண்டு!

    RépondreSupprimer