mardi 9 avril 2013

மதம் ஓா் அபின்




மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்

[கம்பன் இதழ் 17,09,2011]
 
     அமெரிக்க வல்லரசை அதிரச் செய்திருக்கிறது மதமென்னும் பயங்கரவாதம். பயணிகளின் விமானங்களைக் கடத்திச் சென்று அமெரிக்காவின் சர்வதேச வர்த்தக மையக் கட்டிடங்கள் மீதும் இராணுவத் தலைமையகமான பென்டகன் மீதும் மோதிப் பல்லாயிரம் மக்களைக் கொன்று குவித்திருக்கிறது மதமென்னும் பயங்கரவாதம். மூன்றாம் உலகப் போரை மூட்டும் வகையில் நஞ்சு விதைகளை விளைத்துள்ளது மதமென்னும் பயங்கரவாதம். நாகரிகம் அடைந்த மனிதனை மீண்டும் விலங்குகளாய் மாற்றி வருகிறது மதமென்னும் பயங்கரவாதம்.

     குழந்தைகளின் கையில் துப்பாக்கியும் கொலை கொள்ளை புரியும் சிந்தனையும் தந்து மதத்தலைவர்களால் உருவாக்கப்படும் உலகம் அழிவையே அடையும் அமைதி என்ற சொல்லே இல்லாமல் போகும்.

     மதவாதிகளின் தன்னலத்தால் உலகம் அடைந்த கொடுமைகள் கணக்கில் அடங்கா! இந்தியாவை ஆண்டு வந்த அயலவர்கள் தங்கள் மதத்தைத் திணிக்க மேற்கொண்ட கொடுமைகள் இந்திய வரலாற்றில் பதியப்பட்டுள்ளன. இந்துமதத் தன்னலவாதிகளால் தமிழினம் அடிமை இருளில் துயருற்றதும் தமிழ் மொழி குலைக்கப் பட்டதும் மறக்க முடியா! தந்தை பெரியாரால் தமிழினம் அடிமை இருள் நீங்கி ஒளி பெற்றதும் தமிழ்மொழி உயர்வுற்றதும் மறைக்க முடியா!

'மதம் மக்களுக்கு அபின்' என்றார் காரல் மாக்ச். 'மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்' என்றார் வடலூர் வள்ளலார்.

             சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
               சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
             ஆதியிலே அபிமானித்து அலைகின்ற உலகீர்
               அலைந்தலைந்து வீணேநீர் அழிதல் அழகலவே
             நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே நிறுத்த
               நிருத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே
             வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
               மேவுகின்ற தருணம்இது கூவுகின்றேன் உமையே.
                                                     (திருவருட்பா. 5566)

இறைவன் ஒருவனே! அவ்விறைவனுக்கு ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு பெயரிட்டு வணங்குகிறது. உலகோர் இக்கருத்தை உணர்ந்து ஒற்றுமையாய் வாழ்தல் எந்நாளோ! ஒன்றே குலம்! ஒருவனே தேவன்! எனும் நெறியைப் பாரோர் ஏற்றல் எந்நாளோ!

                 'யாதும் ஊரே! யாவரும் கேளிர்'

     எவ்வூராயினும் எம் ஊரே! யாவராயினும் எம் உறவே! என்று உலகச் சமத்துவத்தை அன்றே பாடிய சங்கப் புலவர் கணியன் பூங்குன்றனாரின் உயர்வழியில் மக்கள் வாழ்தல் எந்நாளோ!

     மதங்கள் சொல்லும் நன்னெறியை மறந்து புன்னெறியை நாடினால் அழிவே பெருகும். மதமென்னும் மதம் பிடித்து அலையும் மனிதா! அன்பாம் அமுதைப் பருகுவாய்! அனைவரும் சமமென்னும் உண்மையை உணர்வாய்!

     அன்பே தெய்வம்! அன்பே உயிர்! அன்பே உலகம்!

6 commentaires:

  1. அருமை...

    மதம் மனிதனுக்கு ஒரு சாபம்... அன்பே அனைத்தும்...

    வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      மதம்பிடித்த மாந்தா்களே! வள்ளல் வடித்த
      பதம்படித்தால் நீங்கும் பயம்!

      Supprimer
  2. மதத்தினால் மதம்பிடித்த மதம் சார்ந்த மனிதர்கள் திருந்தத்தான் வேண்டும் இல்லையேல் மதமே அவனை அழித்துவிடும்

    RépondreSupprimer
  3. மதங்கள் மனிதனை மதம் பிடிக்க வைத்து மனித்ததினை தொலைக்கின்றன

    RépondreSupprimer
  4. ஐயா... வணக்கம்!...

    நெஞ்சில் துணிவுமின்றி நேர்மைத்திறனுமின்றி வஞ்சனை செய்வாரடி வாய்ச்சொல்லில் வீரரடி...

    செய்வேண்டிய எத்தனையோ இருக்கிறதே... அதனைவிட்டுச் சாதி சமய குலங்கோத்திரமென்று வீதிக்கொருதர் இப்படி வீணாகிப்போகின்றனர்... வீணாக்கிப்போகின்றனர் ஐயா...

    எப்பொழுது திருந்தி எம்முள் ஒற்றுமை நிலவுமோ.....

    நல்ல பதிவு. பகிர்வுக்கு மிக்க நன்றி!

    RépondreSupprimer
  5. பறவையைக் கண்டான் விமானம் படைத்தான்
    எதனைக் கண்டான் மதந்தனைப் படைத்தான்
    - என்பான் கண்ணதாசன்.
    மனிதனின் கண்டுபிடிப்புகளிலேயே அணுகுண்டினை விட ஆபத்தானது மதம்தான்.
    என்று தனியுமோ இந்த மதத்தின் மோகம்?

    RépondreSupprimer