dimanche 24 mars 2013

நிலவைச் சுற்றும் சூரியன்




நிலவை சுற்றும் சூரியன்

நிலாப் பெண்ணே!
ஏனோ என்
இதய வானில்
உலா வர மறுக்கின்றாய்?

உயிரே! - உன்
உருவம் மட்டும்
என்னுள் தேய்வதே இல்லை!

அன்பே! உன்னைக்
காணும் நாள்கள்
வளர்பிறை!
காணா நாள்கள்
தேய்பிறை!

நிலாப் பெண்ணே!
உன்னைச் சுற்றி வரும்
சூரியன் நான்!

மாதே - உன்
முத்தொளிரும் முகத்துள் - மாதம்
முழுவதும் பௌர்ணமியைக்
காண்கிறேன்!

அழகே! - உன்
ஒளிமுகம் நெஞ்சைப் பறிக்கும்!
பார்வை என்னுயிரை இயக்கும்!

நிலாப் பெண்ணே! - உன்
வட்ட முகத்தைத்
தொட்டுப் பார்க்க
ஆசையடி! - நீ
வெக்கப் பட்டு
முகத்தை மூடுதல்
நேர்மை இல்லையடி!

பெண்ணே - நீ
வெகு தொலைவில்
வருகின்றாய்! - ஆனால்
உன் முகத்தொளி
மனத்தை மயக்குவது எப்படி?

அமுதே - நீ
இல்லையெனில்
வாழ்க்கை இருளாகும்! - நீ
அளிக்கும் உறவே அருளாகும்!

நிலாப் பெண்ணே! - நீ
மறைந்து நின்று
பார்க்கும் பார்வை
இன்பம் நல்குமடி!
மாயம் காட்டி
மயக்கும் விழிகள்
அம்பை எய்துமடி!

பெண்ணே!
எனக்கு எந்நாளும்
சூரிய கிரகணம்!
உன்னைக் கண்டவுடன்
என்னை இழப்பதால்!

அந்த
விண்ணில் மின்னும்
நிலவோ
தொடர்ந்து வருமே என்னை!
இந்த
மண்ணில் மின்னும்
நிலவே - நான்
தொடர்ந்து வருகிறேன் உன்னை!

நிலாப் பெண்ணே!
தென்றல் கமழ்கிறது! - பூஞ்
சோலை மணக்கிறது!
அருகே வந்து
அணைத்தால் என்ன? - நலம்
கொடுத்தால் என்ன?

அன்பே - நான்
சின்னக் குழந்தையென
உன்முன் நிற்கின்றேன்!
விளையாட வருவாயோ? - நலம்
நிலையாகத் தருவாயோ?

நிலவாய் ஒளிரும்
பெண்ணே - உனை
நினைத்தால்
பிறக்கும் கவிதை!
நீயும் நானும்
இணைந்தால் - இங்குப்
படைப்பேன்
புதிய உலகை!

6 commentaires:

  1. ஆகா... நிலவை ஒப்பிட்டு... ரசிக்க வைக்கும் வரிகள்... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நிலவும் அவளும் நெடும்தொலைவில்! தோழா
      குலவும் நினைவுகளின் கூத்து!

      Supprimer

  2. நிலவாய் ஒளிரும்
    பெண்ணே - உனை
    நினைத்தால்
    பிறக்கும் கவிதை!
    நீயும் நானும்
    இணைந்தால் - இங்குப்
    படைப்பேன்
    புதிய உலகை!

    நாங்களும் காண, நாளும் படைப்பீர் ! கவிதை
    உலகை!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கவிஞன் படைப்பேன் கவியுலகம்! இன்பம்
      குவிக்கும் அணிகள் கொடுத்து!

      Supprimer
  3. ஐயா... அருமையோ அருமை! சிறந்த கற்பனை.
    நிலவைச் சுற்றும் சூரியன்....

    நிலவின் குளிர்மையால் சூரியன் தன்னிலை இழந்துவிடவேண்டும் அல்லது சூரியனின் கதிரலையால் நிலவும் சுடும் நிலை வந்துவிடும்.... :)

    மிகவே ரசித்தேன். வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    ஏக்கமதை அழகாய் தேக்கிய உம்பாக்கள்
    தூக்கம்தொலைத்த துடியிளைஞரோ நீரென
    நோக்க வைக்கிறதே நொடியினில் தூக்கியெமை
    தாக்கித் தகர்க்கிறதே தத்திடும் தமிழ்மொழியே...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நீள்விழிப் பார்வையில் துாள்படும் என்னுயிர்
      மீள்வழி கேட்டு விடைதேடும்! - மால்விழி
      காட்டும் அழகாகக் கன்னல் தமிழ்மொழி
      கூட்டும் அழகின் கொடை!

      Supprimer