mardi 12 mars 2013

காதல் ஆயிரம் [பகுதி - 50]





காதல் ஆயிரம் [பகுதி - 50]

491
மாலைவரும் மச்சான் நினைவினில் என்னுள்ளம்
சோலைவரும் வண்டாகச் சொக்குதடா! - சேலைதொடும்
வேலைவரும்! காதல் விளைந்துவரும்! பின்னந்தக்
காலைவரும்! கண்ணில் கசந்து!

492.
மெழுகால் வடித்த மிளிர்மேனி! நெஞ்சைப்
பொழுதெலாம் போட்டுப் புரட்டும்! - அழகே!
தொழுவும் செயலைத் துரத்திடுக! என்னைத்
தழுவும் செயலைத் தரித்து!

493.
காலைவரை கண்ணின் கதவுகள் மூடாமல்
மூளைவரை மோகம் முளைக்குதடி! - கோலமுற
சோலைவரை நான்வந்து சொக்கிக் கிடக்கின்றேன்
மாலைவரை காண்போம் மகிழ்வு!

494.
அந்தவழி போகும் பொழுதெல்லாம் அன்றின்பம்
தந்தவழி என்னுள்ளம் சந்தமிடும்! - செந்தமிழ்
வந்தவழி வந்தவளே! விந்தைவிழி கொண்டவளே!
நிந்தைவழி அத்தனையும் நீக்கு!

495.
செல்லமே என்றுருகும்! சீர்தரும் செந்தமிழ்
இல்லமே என்றுருகும்! இன்பெய்தும்! - நல்லமுத
வெள்ளமே என்றுருகும்! காதல் விளைந்தாடும்
உள்ளமே என்றுருகும் ஓர்ந்து!

496.
செல்லமே! செந்தமிழ்ச் செல்வமே! பொற்கயல்
துள்ளுமே! நற்கவிதை சொல்லுமே! - உள்ளத்தை
அள்ளுமே! பேரழகு கொல்லுமே! ஆசையெனும்
வெள்ளமே பாயும் விரைந்து!

497.
செல்லக் கிளியே! சிரித்தாடும் செம்பகமே!
வல்ல கவியெனை வாட்டுவதேன்? - மல்லிகையே!
மெல்ல நடைநடந்து உள்ளம் புகுந்தவளே!
அல்லல் முழுதும் அகற்று!

498.
கண்வண்ணம் கண்டேன்! கவிவண்ணம் கண்டேன்!உன்
பண்வண்ணம் கண்டேன்! பசுங்கொடியே! - தண்டமிழே! 
பொன்வண்ணம் கண்டேன்! முழுவண்ணம் நான்கண்டால்
என்வண்ணம் ஆவேன் எழுது!

499.
முகங்கண்டேன்! முத்து நகைகண்டேன்! வண்ண
நகங்கண்டேன்! அன்னநடை கண்டேன்! - நிகரில்
அகங்கண்டேன்! மின்னும் அணிகண்டேன்! எண்ணிச்
சுகங்கண்டேன் நாளும் சுவைத்து!

500.
மலர்கண்டேன்! இன்ப மணங்கண்டேன்! வாழ்வில்
வளங்கண்டேன்! வல்லதிறங் கண்டேன்! - நலம்சேர்
குலங்கண்டேன்! கோலமுடன் காதல் செழிக்கும்
களம்கண்டேன் நாளும் களித்து!

(தொடரும்)

11 commentaires:

  1. வண்ணம் படைத்த வரிகளை மிகவும் ரசித்தேன் ஐயா...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சின்ன இடையசையச் சிந்தனைகள் கோடிவரும்!
      கன்னல் கனிதரும் கன்னங்கள் - என்னவளின்
      வண்ண வடிவழகை உண்ணும் மனத்துள்ளே!
      நண்ணும் கவிதை நலம்!

      Supprimer
  2. அருமையான கவிதைகள் அய்யா

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அருமைக் கவிகளை அள்ளி அளிக்கும்
      பெருமை படைத்திட்ட பெண்ணை! - உருகி..நான்
      தீட்டும் எழுத்துக்கள்! சிந்தனையில் செந்தேனை
      ஊட்டும் எழுத்துக்கள! ஓது!

      Supprimer
  3. செல்லமே! செந்தமிழ்ச் செல்வமே! பொற்கயல்
    துள்ளுமே! நற்கவிதை சொல்லுமே! - உள்ளத்தை
    அள்ளுமே! பேரழகு கொல்லுமே! ஆசையெனும்
    வெள்ளமே பாயும் விரைந்து!///அற்புதம்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கற்பனை மின்னும்! கவிபாடச் சொற்களின்
      நற்றுணை மின்னும்! நலம்மின்னும்! - பற்பல
      அற்புதம் மின்னும் அழகுடையாள்! அன்னவளின்
      பொற்பதம் மின்னும் பொலிந்து!

      Supprimer
  4. அருங்கவியாக்கும் பெருங்கவியே! நீங்களிங்கு
    தரும்வெண்பாக்கள் தேன்சுவையே! தமிழ்மொழியை
    விரும்பென வரைந்து தரும்விருந்து எம்மையும்
    இரும்பொடு காந்தமென இழுக்குதே இங்கு!

    RépondreSupprimer
    Réponses


    1. வணக்கம்

      கண்ணிரண்டும் காந்தம்! கருங்கூந்தல் வான்மேகம்!
      விண்திரண்ட விண்மீன் வியனழகி! - பெண்ணவள்
      ஒப்பற்ற பேரழகி! ஒண்டொடியைக் காணாநாள்
      உப்பற்ற தன்மை உடைத்து!

      Supprimer

  5. வண்ணம் பலகண்டும் வாழ்வின் நிலைகண்டும்
    எண்ணம் எழகண்(டு) இயற்றினீர்! – பண்புடைய
    வெண்கவிகள் ஐநூறால் வீழ்ந்தோம் எனசொன்னார்
    பெண்கள் பெருமூச்சு விட்டு!

    --

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      வெண்பா விருந்தை விரும்பிப் படைத்திட்டேன்!
      தண்பா செழித்துத் தழைத்திடவே! - எண்ணத்துள்
      நின்றே எனையியக்கும் நேரிழையாள் பார்வையோ
      நன்றே கணைதொடுக்கும் நாண்!

      Supprimer

  6. வணக்கம்!

    காதல் கமழ்கவியைக் கற்றுக் களிப்பவா்கள்
    மாதா் மனம்அமா்ந்து வாழ்ந்திடுவார்! - போதையென
    எண்ணம் மணக்க இசைத்த கருத்துக்கள்
    வண்ணம் மணக்கும் வகை

    RépondreSupprimer