mercredi 25 décembre 2013

திருமண மண்டபம் - பகுதி 2



இராகவனின் வில்லின் விளைவு
'திருமண மண்டபம்'

திண்மைமிகும் இராகவனின் வில்லால் வந்த
     திருமணமண் டபம்தன்னைப் பாட வந்தேன்!
உண்மைமிகு சொல்லெடுத்துச் சொல்வேன்! வல்வில்
     ஒடித்ததனால் விளைந்திட்ட விளைவை இங்கு! 
தண்மைமிகு காதலிலே உயிர்கள் ஒன்றும்
     தகைசான்ற நாடகத்தைச் சொல்லச் சொல்ல
ஒண்மைமிகு செந்தமிழே பெருகிப் பாயும்!
     உளம்நனைந்து உயிர்நனைந்து பாடும்! ஆடும்!

சீதையவள் அம்புவிழி கூர்மை கண்டு
     சிவன்தந்த பெருவில்லும் உடைந்த தென்பேன்!
கோதையவள் பார்வையினால் தொடுத்த அம்பு
     கோதண்ட ராமனையே வென்ற தென்பேன்!
பேதையவள் என்செய்வாள்? பெருமான் மீது
     பெருங்காதல் கொண்டிளைத்தாள்! இராமன் உற்ற
போதையவள் என்றுணர்த்தும் கம்பன் மாட்சி!
     பொலிந்திருந்த திருமணமண் டபமே சாட்சி!

திருமணத்தை எதிர்ப்பார்த்து நிற்போர் நெஞ்சுள்
     தேன்பாய்ச்சம் இத்தலைப்பு! வாழ்வில் சேர்ந்தும்
ஒருமனத்தை உணராமல் சண்டை யிட்டே
     உடைப்பவர்க்கோ இத்தலைப்பு வெறுப்பு! நாளும்
பெருமனத்தைப் பெற்றுவக்கும் இதயக் கூட்டில்
     பிறந்தாடும் நினைவலைகள்! ஒன்றாய் ஒன்றும்
அருமனத்தை அடைந்தவர்தாம் இராமன் சீதை!
     அவர்மணமா மண்டபத்தைக் காணு வோமே!

ஈருயிரும் ஒன்றாகும்! இனிமை காணும்
     இளமையெனும் பூந்தென்றால் வீசும்! பெற்ற
சீருயரும்! சிரிப்பலையில் காதல் சிந்தை
     சிலிர்த்துயரும்! தேன்சுரந்து பாயும்! உற்ற
பேருயரும்! பெரியோர்தம் வாழ்த்தும் ஓங்கும்!
     பெற்றவர்தம் உயங்குளிரும்! மதிலைச் செல்வி
காருயரும் காகுத்தன் கைகள் பற்றக்
     கமழ்ந்திருக்கும் திருமணமண் டபத்தைக் காணீர்!

ஈசனவன் தன்னுடலில் பாதி வைத்தே
     இவ்வுலகில் பெண்ணுரிமை காத்தான்! சீனி
வாசனவன் தன்மார்பில் மங்கை வாழ
     வழிவகுத்துப் பேரின்பம் கண்டான்! ஆக்கும்
நேசனவன் பிரம்மாவோ நாவில் பெண்ணை
     நிலைத்திருக்கச் செய்திட்டான்! பிரிந்து வந்த
கேசனவன் சீதையுடன் சேர வைத்த
     கீர்த்திமிகு திருமணமண் டபத்தைக் காணீர்!

பூமழையும் பொழிந்ததுவே! இராமன் வண்கை
     பொன்மழையைப் பொழிந்ததுவே! சந்தம் சிந்தும்
பாமழையும் பொழிந்ததுவே! உலகே வந்து
     பாசமழை பொழிந்ததுவே! மோலோர் தந்த
மாமறையும் பொழிந்ததுவே! முரசின் ஓசை
     வான்மழையாய்ப் பொழிந்ததுவே! வானோர் வாழ்த்தாம்
மாமழையும் பொழிந்ததுவே! இராமன் சீதை
     திருமணமா மண்டபத்தின் இனிய காட்சி!

கண்கொள்ளாக் காட்சியென மண்ட பந்தான்
     கமழ்ந்ததுவே! வந்திருந்த மக்கள் கூட்டம்
மண்கொள்ளா நிலையெக்கும்! மகிழ்ச்சி பொங்கி
     மனங்கொள்ளா வழியேகும்! மறையோர் வாழ்த்தும்
விண்கொள்ளா வண்ணத்தில் ஒலிக்கும்! பார்க்கும்
     விழியெல்லாம் நன்னயமே விளைந்தி ருக்கும்!
பண்கொள்ளா வண்ணத்தில் படர்ந்தே ஓங்கும்
     திருராமன் சீதையவள் மணநாள் சீரே!

பகைமுடிக்கும் இராகவனின் வில்லின் மேன்மை
     பழிமுடிக்கும்! பயன்விளைக்கும்! மிதிலை நாட்டின்
மிகைமுடிக்கும் என்றெண்ணி முனிவன் சொன்னான்
     வேள்வியையும் காண்பார்!பின் வில்லும் காண்பார்!
தகைவிளைக்கும் மலர்ச்செல்வி மேனி வண்ணம்
     தாமரைப்பூங் கண்ணானைத் தாக்க, ஏக்கத்
தொகைவிளைக்கும்! தொடர்பளிக்கும்! பிரிந்தோர் கூட
     வகையளிக்கும் வரிசிலையை வாழ்த்தாய் நெஞ்சே!

மண்ணுலகு விண்ணுலகாய் மின்ன! மாய
     மணிவண்ணன் ஆதவனாய் மின்ன! போற்றும்
பெண்ணுலகு வியந்துருகிப் பெருமை கொள்ளக்
     பேரழகாய்ப் பெருந்தேவி மின்ன! வாழ்த்திப்
பண்ணுலகு பல்லாண்டு பாடி மின்ன!
     பரவுதமிழ் பாங்குடனே பாரில் மின்ன!
கண்ணுலவக் கருத்துலவக் காதல் பொங்கக்
     கமழ்ந்திருந்த மண்டபத்தை வாழ்த்தாய் நெஞ்சே!

உலகளந்த பெருமானின் திருத்தாள் மெல்ல
     உயர்வளர்ந்த சீதையினை நாடிச் செல்ல
உயர்வளந்த எண்ணங்கள் கோடி! கோடி!
     உயிரளந்த வண்ணங்கள் கோடி! கோடி!
வளமளந்த வண்டமிழில் கம்பன் தந்த
     மரபளந்த விருத்தங்கள் காலம் வெல்லும்!
நலமளந்த நாரணனின் மண்ட பத்தை
     நானுரைத்தால் எளிதாமோ? வணக்கம்! நன்றி!

புதுவைக் கம்பன் விழா 12.05.2012


7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா.

    காலையில் தங்கள் கவியில் மது உண்டு கழித்த. ...
    வண்டாக மனதில் மகிழ்ச்சி போதையில் நான் இருந்தேன். .ஐயா.
    மிக அருமை வாழ்த்துக்கள்.

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. நீங்கள் உரைத்தால் அனைத்தும் எளிதும் இனிமையும்தான்
    த.ம.2

    RépondreSupprimer
  3. கவிச்சுவை ததும்பும் அழகான ஆக்கம் ..!

    RépondreSupprimer
  4. சீர்மேவும் செல்வமிகு சீதா இராமன்
    பார்புகழும் மாமணம் பாவில் கண்டேன்!
    யாரொருவர் கூறுவரோ ஆமோ அழகு
    ஊறுகிற தேன்பலா ஒன்றாய் இணைந்து!

    சீர்கள் கொழிக்கும் சிறப்பான எண்சீர் விருத்தங்கள்!
    நாள்முழுதும் படித்தாலும் தீராத சுவை ஐயா!

    மிகமிக அருமை!

    என் பணிவான வணக்கமுடன் வாழ்த்துகளும் ஐயா!

    RépondreSupprimer
  5. சீதாராமன் திருமண நிகழ்வினை
    சிறப்பாகக் கவி பாடிக் காட்சியமைத்துக் காண்பித்தீர்கள்!

    அருமையாக இருக்கின்றது!
    கண்களில் கனவாகக் காட்சிகள் மின்னுகிறது!

    வாழ்த்துக்கள் கவிஞரே!

    RépondreSupprimer
  6. வண்டளையும் சோலையதன்
    மலர்வாசம் போலே
    மண்டபமே இங்கே
    மணக்கிறது உம்மாலே !

    அருமை அருமை ரசித்தேன் பலமுறை
    வாழ்த்துக்கள் கவிஞரே வாழ்கவளமுடன்
    த ம 8

    RépondreSupprimer
  7. cute...byhttp://swthiumkavithaium.blogspot.com/

    RépondreSupprimer