dimanche 8 décembre 2019

ஈற்று விடைக் குறள்


வெண்பா மேடை - 149
    
ஈற்று விடைக் குறள்
  
தொடுக்கும் கேள்வியின் ஈற்றில் பதில் அமையும் வண்ணம் பாடப்படும் குறள்.
  
1.
நன்றே தரும்தாய்பால் என்னென்று நற்சபையில்
முன்னே உரைத்தாய் மொழி?
  
மொழிதல் - சொற்களைத் தெளிவாகச் சொல்லுதல்
  
விடை: தாய்மொழி
  
2.
தண்மலரே! சான்றநுால் காக்கும்! தகைகூறும்!
ஒண்மலரே என்ன உரை?
  
உரைத்தல் - பொருளுடன் சொல்லுதல்
  
விடை : நுாலைக் காப்பது - மேலுரை
தகைகூறுவது - விளக்கவுரை
  
3.
மாரனே! நாமாடும் மாண்பு விளையாட்டு
வீரனே! சொல்வாய் விடை?
  
விடை: காளைமாடு [ஏறுதழுவும் விளையாட்டு]
  
4.
கலையேற்கும்! மின்னும் கணியேற்கும்! கோவில்
சிலையேற்கும் தேர்ந்ததைச் செப்பு?
  
செப்புதல் - வினாவிற்கு விடை சொல்லுதல்
  
விடை: செப்புக்கம்பி
  
5.
ஆற்றுக் குளதாம்! அழகே! அணிமொழியாய்!
காற்றுக் கிலையாம் கரை?
  
கரைதல் - அழைத்துச் சொல்லுதல்
  
கரை: நீர்க்கரை, எல்லை
ஆற்றுக்கு கரையுண்டு,
காற்றுக்குக் கரையில்லை
  
6.
ஆட்டுக் கடைக்கே அதிகாலை செல்கின்றேன்
கூட்டிப் பொருள்களைக் கூறு?
  
கூறுதல் - கூறுபடுத்திச் சொல்லுதல்
  
விடை: ஆட்டுக்கறி ஒரு கூறு வேண்டும்
  
7.
உன்னுடை ஏற்கும்! உறங்க இடமிருக்கும்
அன்புடை நண்பா அறை!
  
அறைதல் - வன்மையைாய் மறுத்துச் சொல்லுதல்
  
விடை: வீட்டின் அறை
  
8.
போரேந்தும் அண்ணல் புகழேந்தும்! பேரழகாய்ச்
சீரேந்தும் வார்த்த சிலை!
  
விடை: சிலை - வில்
அண்ணல் இராமனின் புகழேந்தும் வில்லுடையவன்.
  
9.
வெண்மதி காண்பிறையைத் தாங்கும் முகத்தழகை
நுண்மதி யாளே நுதல்
  
நுதலுதல் - ஒன்றைச் சொல்லித் தொடங்குதல்
  
விடை: நுதல் [பெண்ணின் நெற்றி]
  
10.
தேருணர முன்னொளிக்கும்! ஈற்றொளிக்கும்! தேவியே
பாருணரப் பாடிப் பறை
  
பறைதல் - அனைவரும் அறிய வெளிப்படுத்துதல்
  
விடை: பறைமேளம்
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
08.12.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire