dimanche 1 décembre 2019

சித்திரப்பா

சித்திரப்பா - 2
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா. யாப்பருங்கலம் இதனைச் சித்திரக்கா என்றே கூறும்.
  

பத்தாகிய சித்திரப்பா
  
முக்கண் முதல்வனை வேண்டு!
[ஆசிரியப்பா]
  
ஓரிறை! முக்கண்! ஈருடல்! நான்மறைச்
சீரிசை யான்!இரு வினைதீர் நாற்பா
வுடையான்! ஒன்றுள் மூன்றுடை மொழியான்!
சுடரான்! முத்தொழில் முதலான்! நாற்பயன்
ஈவான்! இருமை காப்பான்! நற்றேன்
ஆவான்! நால்வர் அருந்தமிழ் உண்டான்!
இருசபை கொண்டான்! ஈசனைக் கூத்தனை
அருளனை வேண்டு! முப்பொறி ஒன்றுமே!
  
இதனைப் பதினாறு அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கி ஈற்றறையுள் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல், கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பத்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
இறைவன் ஒருவன். முக்கண் உடையவன். மங்கையோர் பாகத்தால் ஈருடல் கொண்டவன். நான்கு மறைகளின் சீரினை உடையவன். நம்முடைய இருவினையைத் தீர்க்கும் நான்குவகைப் பாக்களை யுற்றவன். தமிழென்னும் மொழியுள் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்னும் முத்தமிழ் பெற்றான். காலைக்கதிராய் எழுகின்றவன். படைத்தல், காத்தல், அழித்தல் என்னும் முத்தொழில் முதல்வன். அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்பயனையும் தருபவன். இம்மையும் மறுமையும் காப்பவன். தேன்போல் இனிப்பவன். சமய குரவர் நால்வர் அருளிய தமிழை உண்டவன். சிற்சபை, பொற்சபை கொண்டான். ஈசனை, தில்லைக் கூத்தனை, அருளனை வேண்டித் தொழுகவே. அவனருளால் மனம், வாக்கு, காயம் ஒன்றாகுமே.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
01.12.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire