jeudi 5 décembre 2019

குறில் நெடில் வெண்பா


வெண்பா மேடை - 148
  
குறில் நெடில் வெண்பா
  
பொன்மேவு பூஞ்சிட்டே! மின்மேவு சீர்ப்பட்டே!
இன்மேவு தேன்கட்டே! எந்நாளும் மோகமே
உள்ளூற, ஆசையால் சொல்லுாற, தேவியே!
கள்ளூறக் காட்டுவாய் கண்!
    
நெடில் குறில் வெண்பா
    
பாடவே கண்காட்டு! பாவையே பண்மாலை
சூடவே இன்பூட்டு! தோழியே எந்நாளும்
ஆடியே அன்பூட்டு! ஆசையே! என்மார்பில்
கூடியே நன்காடும் கூத்து!
  
கட்டளைக் கலித்துறைபோல் ஒற்றுகளை நீக்கி இவ்வெண்பாவைக் கணக்கிடவேண்டும். குறில் பின்னே நெடில் வரவேண்டும். நெடில் பின்னே குறில் வரவேண்டும் [இடையில் ஒற்று வரலாம். வராமலும் இருக்கலாம்] வெண்பா குற்றெழுத்தில் தொடங்கினால் குறில் நெடில்.. குறில் நெடில் என வரவேண்டும். நெட்டெழுத்தில் தொடங்கினால் நெடில் குறில்.. நெடில் குறில் என வரவேண்டும்.
  
விரும்பிய பொருளில் 'குறில் நெடில் வெண்பா' அல்லது 'நெடில் குறில் வெண்பா' ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
05.12.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire