பிரிந்தெதிர் செய்யுள்
பிரிந்து எதிர்வனவே பிரிந்து எதிர்செய்யுள்
[மாறன் அலங்காரம் - 290]
நிறைவுற்ற ஒரு செய்யுளின் ஈற்றெழுத்துத் தொடங்கி எதிரேறாக நடந்து வேறொரு செய்யுளாக நிகழ்தல் பிரிந்து எதிர்செய்யுளாம்.
மேகமே வா..வா!
வேகமா வா!கா!
வாகனே வா..மா
வேகனே வா..வா!
இச்செய்யுளின் ஈற்றெழுத்தில் தொடங்கி முதல் எழுத்தில் நிறைவுறும் செய்யுளைக் கீழ்க்காண்க.
வா..வா னேகவே
மா..வா னேகவா!
காவா மாகவே
வா..வா மேகமே!
கா - காத்தல்
வாகன் - அழகன்
ஏகன் - ஒருவன்
வான் - நன்மை, வானம்
காவு - காவாம் - சோலை
முதல் செய்யுளின் பொருள்
மழைதரும் மேகமாய் வாராய்.. வாராய். வேகமாய் வந்து எம்மைக் காப்பாய். அழகனே வாராய்! பெருமை நிறைந்த ஒருவனே வாராய்.. வாராய்.
எதிரேற்றின் பொருள்
வாராய் நன்மையை நடத்தவே, அழகிய வானுலகை ஆளுகின்ற ஒருவனே. மண்ணுலகம் பூஞ்சோலையாய் ஆகவே, மேகமாய் வாராய்.. வாராய்.
பாட்டரசர் கி. பாரதிதாசன்
22.12.2019

Aucun commentaire:
Enregistrer un commentaire