dimanche 1 décembre 2019

சித்திரப்பா

சித்திர கவி மேடை - 8
  
சித்திரப்பா
  
நான்கு கூடினவெல்லாம் பத்தாகவும், மூன்று கூடினவெல்லாம் பதினைந்தாகவும், பிறவாற்றானும் எண் வழுவாமல் பாடுவது சித்திரப்பா.
  
பதினைந்தாக வரும் சித்திரப்பா
  
ஐங்கரனே அருள்வாய்
[நேரிசை வெண்பா]
  
ஈரடியால் என்றன் எழுகுற்றம் நீக்கிடுக!
சீரடியால் ஆறிடுக! ஓரகத்துள் - பேரார்எண்
நாட்டிடுக! முத்தமிழ் நாற்பா நவமணியாய்க்
கூட்டிடுக ஐங்கரனே கோத்து!
  
ஏழு குற்றங்கள் - அகங்காரம், கருமித்தனம், சிற்றின்ப வேட்கை, பேருணவில் ஆசை, முன்கோபம், பகை, சோம்பல்.
ஆறு - வழி
எண் - அறிவு
நாற்பா - அகவற்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா
  
இதனை ஒன்பது அறையாகக் சீறி, வந்த எண்களின் முறைப்படி அறைக்கோர் எண்ணாக முதல் அறையில் தொடங்கிச் சுற்றிவந்து மையத்தில் நிறைவுறும். இடப்பக்கம், வலப்பக்கம், மேல்,கீழ்ப்பக்கங்கள், மூலைப்பக்கங்கள் என எப்பக்கம் கூட்டினாலும் பதினைந்தாக வருகதைக் காண்க.
  
கருத்துரை
  
ஐந்து கைகளை உடைய ஆனைமுகத்தானே, உன்றன் இரண்டு திருவடிகளால் என்றன் ஏழு குற்றங்களை நீக்கிடுவாய். உன்றள் சீரடியால் வாழும் வழியைக் காட்டிடுவாய். வேறு நினைவின்றி உள்ள என்னுடைய ஒருமையுளத்துள் அறிவை நாட்டிடுவாய். முத்தமிழின் நான்கு பாக்களை நவமணிபோல் ஒளிருகின்ற வண்ணம் கோத்து அளித்திடுவாய்.  

பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire