mardi 3 décembre 2019

முதற்சீர் பிறழடி வெண்பா


வெண்பா மேடை - 147
  
முதற்சீர் பிறழடி வெண்பா
  
வானே யெனப்புகழ் வார்க்கின்ற வண்டமிழே!
மானே யெனத்துள்ளும் என்மனமே! - கானே..நீ
வேய்நீந்தி மேவும் வியனிசையாய், என்னுடைய
வாய்நீந்திச் செந்தேனே வா!
  
கான் - மணம்
வேய் - புல்லாங்குழல்
  
தாதுருவி வாசமிகு சாந்திழைத்து, தேன்கலந்து
வா..துருவிச் சீரேந்தி! வண்டமிழே! - மாதுருவில்
கொண்ட இறைவன் குணமொழியே! நான்மகிழத்
தண்டமிழே பாவிருது தா!
  
தாது - பூவிதழ்
உருவி - உருவுதல்
துருவி - ஆராய்தல்
மாதுருவில் - மாதை உருவில் கொண்ட
  
பிறழ்தல் - மாறுதல்
  
வெண்பாவின் முதற்சீரில் உள்ள எழுத்துக்கள் தலைகீழாய், வெண்பாவின் ஈற்றில் அமையவேண்டும். மேலுள்ள முதல் வெண்பாவில் 'வானே' என்று வந்த முதல் சீர் ஈற்றில் 'னே..வா' என்று வந்தது. இரண்டாம் வெண்பாவில் 'தாதுருவி' என்று வந்த முதல்சீர் 'விருது..தா' என்று வந்தது.
  
விரும்பிய பொருளில் முதற்சீர் பிறழடி வெண்பா ஒன்றைப் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன். "பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிடுக.
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
நிறுவுநர்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம் பிரான்சு
12.12.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire