lundi 19 août 2013

பொதுவுடைமைப் பூங்கா சீவா!





பொதுவுடைமைப் பூங்கா சீவா!

உழவும் தொழிலும் உண்மையில் உயரப்
பழுதிலாப் பணிகள் பாரினில் ஏற்றுக்
கண்டதைக் கற்றுப் பண்டித ராகித்
தொண்ட ரானார் தூய தமிழுக்கே
புதுமை நாடிய புரட்சி வீரர்
பொதுமையில் பூத்த புகழ்சேர் சீவா!
சாதியை வெறுத்தார்! சமயம் மறுத்தார்!
தீதாம் தீண்டாமை வேண்டாம் என்றார்!
கலப்பு திருமணம் கண்டே மகிழ்ந்தார்!
கலப்படப் பொருளைக் கடிந்தே இகழ்ந்தார்!
எளியோர் வாழ்வும் ஏற்றம் பெறவே
சளையா(து) உழைத்தார் சான்றோர் சீவா!

நீதி பொதுவாய் நிலைபெறச் சட்டமும்
நாதி யற்றோர் நலமுறத் திட்டமும்
மண்டும் மடமை அண்டா ஆணையும்
கொண்டநல் ஆட்சியே கொணர்வீர் என்றார்!
சொல்வது போலவே செயலைத் தொடரும்
வல்லமை பெற்றே வாழ்ந்தார் சீவா!
நாட்டு பற்றும் நற்றமிழ்ப் பற்றும்
கூட்டாய்க் கொண்ட கொள்கைச் சீலர்!
பாரதி பாட்டையும் கம்பன் கவியையும்
சீராய்க் கற்ற செந்தமிழ்ச் செல்வர்!
சனசக்தி இதழைத் தாமரை மலரை
மணக்கச் செய்த மன்னர் சீவாவே!

5 commentaires:

  1. மாற்றி உடுத்த துணிக் கூட இல்லாமல் நாட்டுக்கு உழைத்த சீவா அவர்களைப் போற்றுவோம்

    RépondreSupprimer
  2. அருமை... வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  3. //நாட்டு பற்றும் நற்றமிழ்ப் பற்றும்
    கூட்டாய்க் கொண்ட கொள்கைச் சீலர்//

    சீவாவின் பெருமைகளை அறிந்துகொண்டேன் உங்கள் பாவினால்.

    மிகச் சிறப்பு!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  4. பாலின்றி பிள்ளை அழும்
    பட்டினியால் தாய் அழுவாள்
    வேலையின்றி நாம் அழுவோம்
    வீடு முச்சூடும் அழும்

    என்று மக்களை திரட்டி போராடிய தீரரின் நினைவை போற்றுவோம்

    RépondreSupprimer
  5. ஜீவா குறித்த அருமையான கவிதை...
    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer