vendredi 9 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 120]




காதல் ஆயிரம் [பகுதி - 120]

981.
காட்டுக்குள் மின்னும் கமழ்மலர் அத்தனையும்
ஏட்டுக்குள் பின்னும் இளங்கவியே! - தீட்டுகின்ற
பாட்டுக்குள் மின்னும் பதமெல்லாம் என்னிதயக்
கூட்டுக்குள் மின்னும் குளிர்ந்து!

982.
அலையாகப் பாயும் அமுதத்தை அள்ளிக்
கலையாகப் பாடும் கவியே! - வளைத்து
நிலையாக என்னுள் நெகிழ்பவனே! உன்னால்
மலையாக நிற்கும் வளம்!

983.
எண்ணம் முழுதும் இனியவனே ஆள்கின்றாய்!
உண்ணும் உணவாய் உயிர்தந்தாய்! - வண்ணமுடன்
கன்னல் கவிகேட்டுக் காதல் நடைதொடுத்தேன்!
இன்னல் இனிக்கிறதே இன்று!

984.
கொட்டென்று கொட்டும் குளிர்மழையில் நாம்நனைய
பட்டென்று காதல் படருதடி! - சிட்டாகக்
கூடி இணைந்திடுவோம்! கோடி முறையேனும்
பாடிப் புனைந்திடுவோம் பாட்டு!

985.
வதைத்தாலும் என்ன? வருத்தியெனை நாளும்
உதைத்தாலும் என்ன? உயிரை - மிதித்தாலும்
என்னை இழப்பேனா? என்னுள் இருக்கின்ற
உன்னை இழப்பேனா ஓது?

(தொடரும்)

6 commentaires:

  1. பெண்ணாசை துறந்த ஒரு முனிவரிடம்
    தங்கள் காதல் கவிதைகள் அனைத்தையும்
    ஒருமுறை படிக்கச் சொன்னால்
    நிச்சயம் அவர் காதலின் பெருமை உணர்ந்து
    காதலிக்கத் துவங்க்கிவிடுவார் என நினைக்கிறேன்
    பகிர்வுக்கும் தொடரவும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  2. ரமணி ஐயா அழகாகக் கூறிவிட்டார்!...

    துறவியைக்கூடத் தூர ஓடவிடாமல்
    தடுக்கின்ற ஆற்றல் தரும் வெண்பாக்கள்!

    என் பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  3. வதைத்தாலும் என்ன? வருத்தியெனை நாளும்
    உதைத்தாலும் என்ன? உயிரை - மிதித்தாலும்
    என்னை இழப்பேனா? என்னுள் இருக்கின்ற
    உன்னை இழப்பேனா ஓது?

    -----


    காதல் சுகமானது...

    அருமை.

    RépondreSupprimer
  4. கன்னல் கவிகேட்டுக் காதல் நடைதொடுத்தேன்!
    இன்னல் இனிக்கிறதே இன்று!


    என்னே ஒரு வார்த்தைகள்

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    த ம 8

    RépondreSupprimer
  5. காதல் என்றாலே இனிக்கும்! தேன் சுவையை மிஞ்சும் கனிரசம் பொங்கும் கவிதை வரிகளில் முதுமைகூட இளமையாய் மாறிவிடும் சுகமான வரிகள் சுவையான கவிதை

    RépondreSupprimer