dimanche 18 août 2013

செங்கழுநீர்த் தாயே போற்றி!



செங்கழுநீர்த் தாயே போற்றி

முத்தரையர் பாளையத்தில் வந்து தித்த
     முக்கண்ணன் நாயகியே! உலகம் உய்ய
சித்திரையின் நிலவைப்போல் ஒளியைத் தந்து
     செழித்தோங்கும் நல்வாழ்வு தருவாய் நீயே!
இத்தரையில் பிறந்திட்ட மாந்தர் தம்மை
     என்றென்றும் உன்னருளால் காப்பாய் தாயே!
சித்திதரும் ஓங்காரி! செகமே போற்றும்
     செங்கழுநீர் அம்மையெனப் பேர்பெற் றாயே!

விழுதுள்ள ஆலைப்போல் தழைக்க செய்வாய்
     மேதினியில் உனைநாடி வருவோர் வாழ்வை!       
பழுதுள்ள கல்நெஞ்சம் திருந்தக் கூடும்
     பதுமத்து நின்னடியைப் பணிந்திட் டாலே!
மெழுகுள்ளங் கொண்டவளே உன்னை நாளும்
     வேண்டிவரும் அன்பருக்கே உருகு வாயே!
அழகுள்ள முத்தரையர் பாளை யத்தில்
     அருள்புரியும் செங்கழுநீர்த் தாயே போற்றி!

உலகமெனும் உருண்டையினை இயக்கும் சக்தி!
     ஓமென்னும் ஒலியாக ஓங்கும் சக்தி!
நிலமெங்கும் காணுகின்ற இயற்கைச் சக்தி!
     நீள்வானில் மிளிர்கின்ற கோளின் சக்தி!
தலமெங்கும் விளைகின்ற விளைவின் சக்தி!
     தக்கோரின் மனத்துள்ளே தங்கும் சக்தி!
திலகமென எழில்பொங்க விளங்கும் சக்தி!
     செப்பியஇச் சக்தியெலாம் நீதான் அம்மா!

மிளிருகின்ற வைரமுடி மின்னக் கண்டேன்!
     மின்கொடியை நீலகண்டன் உருவில் கண்டேன்!
ஒளிருகின்ற வெண்முத்துப் பல்லில் கண்டேன்!
     உதட்டின்மேல் பவளத்தின் நிறத்தைக் கண்டேன்!
தளிருகின்ற நின்னழகு மார்பில் துன்னும்
     தகதகக்கும் மாணிக்க மாலை கண்டேன்!
குளிருகின்ற இரவினிலே கனவில் கண்ட
     கோலமிகு செங்கழுநீர் அன்னாய் போற்றி!

15.08.1980

7 commentaires:

  1. வணக்கம்
    ஐயா

    இறைவியைப்பற்றிய பாடல் மிக அற்புதம் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  2. கோலமிகு செங்கழுநீர் அன்னாய் போற்றி!போற்றி
    நன்றி ஐயா

    RépondreSupprimer
  3. பக்திரசம் கொட்டும் கவிதையின் அழகில்
    தேன் சொட்டும் வார்த்தைகளின் கோர்வையில்
    மனம் மயங்கிப்போனது
    பகிர்வுக்கு மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    RépondreSupprimer
  4. சிறப்பான வரிகள்... அனைத்தும் சக்தி மயம்...! வாழ்த்துக்கள் ஐயா...

    RépondreSupprimer
  5. ஐயா வணக்கம்!

    அழகான எண்சீர் விருத்தமதில் அன்னையின் புகழ்
    பாடியது கண்டு உள்ளம் பூரித்தேன்!

    அத்தனை இனிமையும் மனதிற்கு அமைதியையும் தருகின்ற பாக்கள்.
    மிக மிக அருமை!

    பணிவான வணக்கமும் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  6. அம்மனுக்கு ஆராதனை...
    அருமை.

    RépondreSupprimer
  7. அழகான பாடலும் படமும்!

    மனதில் அப்படியே சொற்களனைத்தும் ஒட்டிக்கொள்கின்றது.
    பக்திப் பாமாலை. அருமை!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer