jeudi 8 août 2013

காதல் ஆயிரம் [பகுதி - 119]




காதல் ஆயிரம் [பகுதி - 119]


976.
கழிகிறது ஓர்நொடியும் ஓர்யுகமாய்க் கண்டு!
மொழிகிறது மோகம் முளைத்து! - பழியைப்
பொழிகிறது பொய்யாய்ப் புலவன்மேல்! பொங்கி
வழிகிறது காதல் வளர்ந்து!

977.
தேக்குமரத் தோளழகா! தேவியெனை அப்படியே
தூக்கிவர என்செய்வேன்? சொக்குகிறேன்! - நீங்காத
ஏக்கமுடன் பார்க்கின்றேன்! இன்பக் கவியெழுத
ஊக்கமுடன் பார்க்கின்றேன் ஓர்ந்து!

978.
பொன்னிதயம் பெற்றவளே! பூவே! புலவனின்
இன்னிதயக் கூட்டை இடிப்பதேன்? - உன்னிதய
வாயிலை ஏன்அடைத்தாய்? இன்பக் கவியெழுதும்
கோயிலை ஏன்அடைத்தாய் கூறு?

979.
கொஞ்சுமொழி பேசிய கோதையின் செவ்விதழ்
நஞ்சுமொழி பேசுதல் நாயமோ? - விஞ்சினிமை
வஞ்சிமொழி யாகும்! வருத்தம் எதற்காக?
பஞ்சிமொழி யாளே பகர்!

980.
செல்லமொழி பேசிடுவாள்! செந்தேனில் சொல்கலந்து
மெல்லமொழி பேசிடுவாள்! வெல்மொழியாள்! - வல்லமையாய்
நல்லமொழி பேசிடுவாள்! நற்றமிழில் போட்டியிட
இல்லைவழி என்றும் எனக்கு!

(தொடரும்)

4 commentaires:

  1. கெஞ்சும் மொழி கொஞ்சுதே காதலில்
    விஞ்சுமே வாழ்வில் விரைந்து!

    RépondreSupprimer
  2. ஐயா!

    உங்கள் வெண்பாக்களைக் கண்டவர்வர்கள் பேச்சு மறந்தனரோ?
    இனியாகிலும் காதலை உணர்வோமென எண்ணினர் போலும்!

    வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  3. செல்லமொழி பேசிடுவாள்! செந்தேனில் சொல்கலந்து
    மெல்லமொழி பேசிடுவாள்! வெல்மொழியாள்! - வல்லமையாய்
    நல்லமொழி பேசிடுவாள்! நற்றமிழில் போட்டியிட
    இல்லைவழி என்றும் எனக்கு!

    அருமை அருமை வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்
    த ம5

    RépondreSupprimer