samedi 16 mars 2013

தமிழழகு



தமிழ் அழகு

அமுதே! தமிழே!
அழகிய மொழியே!
எனதுயிரே!
சுகம்பல தரும் தமிழ்ப்பால்!
சுவையொடு கவிதைகள் தா!
தமிழே! நாளும் நீ பாடு!

தேனூறும் தேவாரம்!
இசைப்பாட்டின் ஆதாரம்
தமிழிசையே தனியிசையே!
தரணியிலே முதலிசையே!
ஊன் மெழுகாய்
உருகும்! கரையும்! – அதில்
உலகம் மறந்துபோகும்!
பூங்குயிலே என்னோடு
தமிழே நாளும் நீ பாடு!

பொன்னல்ல! பூவல்ல!
பொருளல்ல செல்வங்கள்!
கலைபலவும் பயிலவரும்!
அறிவுவளம் பெருமைதரும்!
என் கனவும் நினைவும்
இசையே! இசையே!
இசையிருந்தால் மரணம் ஏது?
என்மனத்தில் தேன்பாய
தமிழே! நாளும் நீ பாடும்!

தமிழின் அழகை, தமிழின் சுவையைச் சாற்றும் பாடல் இது! தமிழின் இசையை, தமிழின் இனிமையைப் போற்றும் பாடல் இது!

தமிழ் என்றால் அழகு! தமிழ் என்றால் அமுது! தமிழ் என்றால் அறிவு! தமிழ் என்றால் துணிவு! தமிழ் என்றால் வீரம்! தமிழ் என்றால் ஈழம்! ஆம்! உலக வரலாறு இனி இப்படித்தான் எதிர்வரும் தலைமுறைக்கு உரைக்கும்.

புதுவையில் பிறந்த புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனார்

தமிழுக்கு அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்

என்று பாடித் தமிழ் உணர்வை நம் நரம்புகளில் ஏற்றினார்!

முறுக்க மீசைக்காரன், முண்டாசுக் கவிஞன், நெருப்புப் பார்வையால் பகையைப் பொசுக்கிய புலவன், பாட்டுத்தேர் ஓட்டிய மகாகவி பாரதியார்

யாமறிந்த மொழிகளிலே
தமிழ்மொழிபோல் இனிதாவது
எங்கும் காணோம்

தமிழின் சிறப்பை, தமிழின் சுலையை, தமிழின் உயர்வை, தமிழின் வாழ்வை, தமிழின் வளத்தை, தமிழின் தன்னிகர் இல்லாத் தனிப்பெரும் அழகை உலகக்குப் பறையடித்து முழங்கும் பாடல் இது!

காலைக் கதிர் அழுகு! மாலை நிலவழகு! சோலை மலரழகு! பாளை சிரிப்பழகு! முற்றித் தொங்கும் கனியழகு! பற்றித் தொங்கும் அணியழகு! ஓடும் நதியழகு! பாடும் குயிலழகு! ஆடும் மயிலழகு! கூடும் பறவைகளின் கொஞ்சும் மொழியழகு!

கொட்டும் மழையழகு! குளிரும் பனியழகு! வீசும் காற்றழகு! விளையும் நாற்றழகு! கடலழகு! மடலழகு! உடலழகு! ஆம்.. உலகம் அழகின் கோயிலாகக் கவிதை பாடும் கவிஞனின் கண்களுக்குக் காட்சி தருகின்றது! அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு! எங்கள் தமிழழகு!

தமிழின் எழுத்தழகு! தமிழின் சொல்லழகு! தமிழின் பொருளழகு, தமிழின் அணியழகு! தமிழின் யாப்பழகு! கொட்டிக் கிடக்கும் முத்துக் குவியல் தமிழ்! அள்ள அள்ளச் சுரக்கும் அமுத ஊற்றுத் தமிழ்! கண்ணை கருத்தைக் கவர்ந்து மின்னும் அழகே தமிழ்!

தமிழின் எழுத்தின் அழகை எடுத்துரைக்க இவ்வுலகின் எல்லைகளைத் தாண்டி விரிந்து பரவும்!

உயிரெழுத்துப் பன்னிரண்டும், மெய்யெழுத்துப் பதினெட்டும் முதன்மை எழுத்துக்களாகத் திகழ்கின்றன.

உயிரும் உடம்பும் முப்பதும் முதலே

என்று நன்னூல் நவிலும். உயிரெழுத்துக்களும், மெய்யெழுத்துக்களும் கூடி உயிர்மெய் எழுத்துக்கள் 216 பிறக்கின்றன. மனிதனின் உடல் உயிர்த் தத்துவத்தை விளக்கும் வண்ணம், தமிழ் எழுத்துக்களுக்குப் பெயரிட்டு வழங்கியமை, அழகின் உச்சத்தையும், அறிவின் உச்சத்தையும் உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன.

உலகப் பொதுமறையைத் தந்த திருவள்ளுவனார் அகரத்தில் முதல் குறளைத் தொடங்கி, னகரத்தில் ஈற்றுக் குறளைப் படைத்துத், திருக்குறளை நிறைவுசெய்துள்ளார்.

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

ஊடுதல் காமத்திற்கு இன்பம்! அதற்கின்பம்
கூடி முயங்கப் பெறின்

குறள் அகரம் என்று தொடங்கிப், பெறின் என்று முடிந்துள்ளது. திருக்குறள் தமிழின் அழகையும், தமிழின் அறத்தையும் அகிலத்துக்கு எடுத்துக்காட்டுகின்றது.

மொழிக்கு முதல்வரும் எழுத்துக்கள், மொழிக்கு ஈற்றில் வரும் எழுத்துக்கள் என வகை பிரித்து, வாழும் வாழ்க்கையை மொழியுள் அமைத்தான் தமிழன்! வாழ்வியலைத் தன்னுள் கொண்ட தமிழ் எழுத்தியலை, எழுத்தியல் ஏந்தும் அழகியலை என்னென்று போற்றுவது?

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, செம்மையான இலக்கியங்களை இலக்கணங்களைப் பெற்றது நம் தமிழ்மொழி! ஐந்திலக்கணத்தைப் பெற்ற தொல்காப்பியத்திற்கு ஈடாக வேற்றுமொழிகளில் தொன்மையான இலக்கண நூல் இல்லை.

தமிழே உலகின் முதன்மொழி! தமிழனே உலகின் முதல் மாந்தன் என்று மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்  ஆய்வு நூல்கள்  உரைக்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை அழிக்க வந்த பகையை எதிர்த்து நின்று, வெற்றிபெற்று, தன்னிலை குன்றாமல் நிலைத்து நிற்கும் தமிழின் அழகென்ன? தமிழின் திறமென்ன? தமிழின் உரமென்ன?

தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
பரவும்வகை செய்தல் வேண்டும்

தெருவெல்லாம் தமிழ்முழக்கம் செழிக்கச் செய்வீர்

வீரம் விளையும் நிலத்தில் பிறந்த ஈழத்தமிழர், மகாகவி பாரதியின் அடிகளை மனத்தில் ஏந்தி உலகமெல்லாம் தமிழைப் பரப்புகின்றனர்.

அழகு என்றால் தமிழ்! தமிழ் என்றால் ஈழம்! ஈழம் என்றல் வீரம்! வீரம் என்றால் தமிழ்! தமிழ் என்றால் அழகு!

ஆம்.. ஆம் தமிழ் என்றால் அழகு!

4 commentaires:

  1. //உலகம் அழகின் கோயிலாகக் கவிதை பாடும் கவிஞனின் கண்களுக்குக் காட்சி தருகின்றது! அத்தனை அழகையும் விஞ்சுகின்ற பேரழகு! எங்கள் தமிழழகு! //
    எப்படிச்சொன்னால் தீரும் எங்கள் தமிழின் அழகை. அத்தனை விதமாக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் கவிஞர் ஐயா! தமிழின் அழகை நீங்கள் உரைப்பதைப் படிக்கும்போது மனம் அதிலே ஒன்றிக் கரைகிரது.
    அருமை அருமை. வாழ்த்துக்கள்!
    தொடருங்கள் ஐயா தொடர்கிறோம் நாமும்...

    தன்னிகரில்லாத் தமிழழகை வியந்து போற்றி
    முன்னின்றுரைக்க முப்பொழுதும் போதாதே
    பன்னிருகை வேலவன் பக்கத்துணையிருக்கக்
    கன்னித்தமிழவள் காத்திடுவாள் எங்களையே!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      இளமதி ஈந்திட்ட இன்றேன் கருத்தை
      உளம்மகிழ்ந் தேற்றேன் உயா்ந்து! - வளா்தமிழ்
      ஓங்க உழைப்பதென் வேலை! தமிழ்த்தாளைத்
      தாங்கும் அடியேன் தலை!

      Supprimer
  2. தாங்கள் கூறுவது மூலம் மேலும் சிறப்பு ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகத் தன்னை அழிக்க வந்த பகையை எதிர்த்து நின்று, வெற்றிபெற்று, தன்னிலை குன்றாமல் நிலைத்து நிற்கும் தமிழின் அழகென்ன? தமிழின் திறமென்ன? தமிழின் உரமென்ன?

    இனியொரு பிறவி வேண்டாம்
    இருப்பின் தமிழே உனையன்றி
    வேறொரு அறிமுகம் வேண்டவே வேண்டாம்.

    தமிழுக்கும் அமுதென்று பேர்
    அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்
    உயிருக்கு நேர்!
    பாரதிதாசன் வரிகளை நினைவு படுத்திவிட்டது ஐயா தங்கள் பகிர்வு.

    RépondreSupprimer