dimanche 13 janvier 2013

தமிழ் மாதப் பெயா்கள்



தமிழ் மாதப் பெயா்கள்


      சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி என்பன தமிழ் மாதப் பெயர்களாம். இப்பெயர்களைத் தமிழ் அன்பர்களும், தமிழ் அறிஞர்களும், சான்றோர்களும் இப்பொழுது கையாள்வதில்லை. புதியதாக உருவாக்கப்பட்ட மேழம், விடை, ஆடவை, கடகம், மடங்கல், கன்னி, துலை, நளி, சிலை, சுறவம், கும்பம், மீனம் என்னும் பெயர்களைப் பயன்படுத்துகின்றனர், பரப்புகின்றனர். ஏன் முன்பிருந்த திங்கட்பெயர்கள் நீக்கப்பட்டன? ஏன் புதிய பெயர்கள் உருவாக்கப்பட்டன?

      சித்திரை முதலாகிய திங்கட்பெயர்கள் தமிழ் அல்ல. தமிழ் மாதங்களின் பெயர்கள் தமிழாக இருக்க வேண்டுமென விரும்பிய மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் புதிய மாதப் பெயர்களை உருவாக்கினார். பாவாணர் படைத்த மாதப் பெயர்களைத் தனித்தமிழ் அன்பர்களும், ஆய்வாளர்களும் ஏற்றுக்கொண்டு நடைமுறைப் படுத்துகின்றனர்.

      வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான செல்வத்தை ஈட்டுதல் முறையே. நாம் இழந்த ஒரு பொருளை மீண்டும் முயன்று பெறுதல் மரபே! வாழ்வை அழிக்கும் தீயச் செயல்களை ஒழித்தல் நலமே! இக்கருத்துக்கள் மொழியியலுக்கும் பொருந்தும். ஒரு மொழி வளர்ந்தோங்கி நிலைத்து நிற்க, தேவையான புதிய சொற்களை உருவாக்குதல், இழந்த சொற்களை மீண்டும் பெறுதல், கலந்துள்ள அயற்சொற்களை நீக்குதல், ஒரு மொழியின் தனித் தன்மையையும் சிறப்பையும் காக்க இச்செயல்கள் வழி படைக்கின்றன. மொழி அறிஞர் பாவாணர் அவர்கள் பிற மொழியில் அமைந்திருந்த தமிழ் மாதப் பெயர்களை நீக்கி, புதிய தமிழ் மாதப் பெயர்களைப் படைத்தது, தமிழ்மொழியைக் காத்துத் தனித்தமிழை வளர்க்கும் பொருட்டே.

      ஆங்கில மொழியில் பிற மொழிச் சொற்கள் மிக மிக அதிகமாகக் கலந்திருந்தும், ஆங்கில அறிஞர் சிலர் அயற்சொல் கலவாமல் எழுதிய நூல்களை அம்மக்கள் போற்றிப் புகழ்கின்றனர். பிரான்சு நாட்டில் நான் பணிபுரியும் பொருட்காட்சியைக் கண்டுகளிக்கச் சப்பானில் இருந்து கல்லூரி மாணவ மாணவியர் வந்திருந்தனர். நான் பாதுகாக்கும் அறையைப் பார்வையிட வந்த அவர்களுக்கு ஆங்கில மொழியில் அங்குள்ள பொருட்களைப் பற்றி விளக்கம் அளித்தேன். வந்த மாணவ மாணவியர் பலருக்கு மிக நன்றாகவே ஆங்கிலம் தெரிந்திருந்தது. ஆனால் அவர்கள் ஆங்கிலத்தில் ஒரு சொல் கூடப் பேசவில்லை. சப்பான் மொழியிலேயே வினாக்களைத் தொடுத்தனர். சப்பான் மொழி அறியாத நான், எந்தப் பொருளைக் காட்டி வினா எழுப்புகிறார்களோ அந்தப் பொருளைப் பற்றிய செய்திகளை ஆங்கிலத்தில் தெரிவித்தேன். இறுதி வரை அவர்கள் ஒரு சொல் கூட ஆங்கிலத்தில் பேசவில்லை. சப்பான் மொழியிலேயே பேசினார்கள். கடைசியாக ஒரு மாணவியிடம் நான் ஒரு கேள்வி கேட்டேன். ஆங்கிலத்தில் சொல்லும் விளக்கத்தைப் புரிந்து கொண்ட நீங்கள், ஏன் ஆங்கிலத்தில் பேசவில்லை? உங்களுக்கு ஆங்கில மொழி நன்றாகத் தெரியாதா? நான் கேட்ட கேள்விக்கு அந்த மாணவி ஆங்கில மொழியில் மிக அழகாகப் பதிலுரைத்தாள். எங்கள் அனைவருக்கும் மிக நன்றாக ஆங்கிலம் தெரியும், காரணமின்றிப் பிற மொழியில் பேசுவதையோ, எழுதுவதையோ நாங்கள் விரும்புவதில்லை. சப்பான் மாணவ மாணவியர்தம் தாய்மொழிப் பற்றைக் கண்டு திகைத்து நின்றேன்.

      என் வீட்டிற்கு வருகை தந்த நண்பர், கைத் தொலைப்பேசி வழியாக அவருடைய நண்பரிடம் பேசினார். மிக அதிகமாக ஆங்கிலச் சொற்களைப் பயன்படுத்திப் பேசினார். நன்றாக ஆங்கிலம் தெரியும் என்பதைத் தெரிவிக்கும் பொருட்டே நண்பர் ஆங்கிலம் கலந்து பேசினார் என்பதைப் பின்னே நான் உணர்ந்துகொண்டேன்.

      தமிழர் தங்களுக்கு ஆங்கிலம் தெரியும் என்பதைக் காட்டிக் கொள்ள விரும்புவதும், சப்பான் மாணவர்கள் ஆங்கிலம் பேச விரும்பாமையும் எண்ணிப் பார்க்கத்தக்கன. தமிழ்மொழியின் சிறப்புணர்ந்து, அதன் தனித்தன்மையைக் காத்து வாழ்பவரே தமிழராவார்.
 

6 commentaires:


  1. பொங்கல் வாழ்த்துக்கள்!
    உங்கள் தமிழ்ப்பணியால்
    எங்கள் உள்ளம் மகிழ்கிறது!
    கம்பன் புகழ்பாடி
    கன்னித் தமிழ்பாடி
    வாழ்க நீடுழி!
    பலகோடி ஆண்டுகள்

    RépondreSupprimer
  2. இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.

    RépondreSupprimer


  3. உங்களுக்கும் உங்களுடைய குடும்பத்திற்கும் எனது இனிய பொங்கல் நல் வாழ்த்துகள்.

    RépondreSupprimer

  4. வணக்கம்!

    பொங்கல் பொங்குக!
    இன்பம் தங்குக

    RépondreSupprimer
  5. அன்பான இனிய பொங்கல் நன்னாள் வாழ்த்துகள் ஐயா !

    RépondreSupprimer
  6. இனிய பொங்கல் வாழ்த்துக்கள அய்யா

    RépondreSupprimer