jeudi 31 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 16]





காதல் ஆயிரம் [பகுதி - 16]

151.
சில்லென்று காதல் மழைபொழியும்! சிந்தனையை
வெல்லென்(று) அழைத்து விளையாடும்! – கள்ளூறும்
சொல்லொன்று சொல்லும்! உயிர்சொக்கும்! பூங்கணைகள்
கொல்லென்று பாயும் குவிந்து! 

152.
படுத்தால் உடன்படுப்பாள்! பாவையிடம் கேள்வி
தொடுத்தால் பதிலும் கொடுப்பாள்! – எடுத்தால்
தடுப்பாள்! இளமைத் துடிப்பால் பாக்கள்
விடுப்பாள்! அவையென் விருந்து!

153.
பொன்னகை என்னாம்? பொலியும் மணியென்னாம்?
புன்னகை முன்னே! புகழ்தமிழே! – என்னுயிர்க்
கன்னிகை காட்டிடும் கண்ணகைக்(கு) ஈடாக
மின்னகை உண்டோ விளம்பு?

154.
கொடிதவழும்! தையில் குளிர்தவழும்! மாயோன்
அடிதவழும் அன்பர்தம் ஆன்மா! – சுடரும்
குடிதவழும் மாண்பு! குவியழகே! உன்றன்
மடிதவழும் என்றன் மனம்!

155.
மெல்ல நடைநடந்து! வெல்லும் விழிமலர்ந்து!
வெல்லச் சுவைகலந்து விஞ்சுகிறாய்! – சொல்லவே
வல்ல புலமை வளர்ந்து மணக்கிறது!
இல்லை இனியோர் இடர்!

156.
பார்க்காத நாளெல்லாம் பட்டமரம் போலாகும்!
சேர்க்காத பாட்டெல்லாம் சீரிழக்கும்! - பேரெடுத்து
வார்க்காத வாழ்வென்ன? வஞ்சியுடன் என்னெஞ்சம்
கோர்க்காத வாழ்வென்ன கூறு?

157.
வீட்டுக்குள் உன்னினைவு! வேலை புரிகின்ற
காட்டுக்குள் உன்னினைவு! கண்மணியே! – பாட்டெழுதும்
ஏட்டுக்குள் உன்னினைவு! எந்நொடியும் என்னிதயக்
கூட்டுக்குள் உன்னினைவு கூத்து!

158.
நான்என்ன செய்யும் நறுந்தமிழே? உன்மொழிமுன்
தேன்என்ன செய்யும்? திகைகின்றேன்! – கான்வாழும்
மான்என்ன செய்யும்? மயில்என்ன செய்யும்?உயர் 
வான்என்ன செய்யும்? வடிவு!

159.
செல்லக் கவிதை! செழுந்தமிழ் நெஞ்சத்தை
அள்ளும் கவிதை! அளித்தனையே! - மல்லிகையே!
சொல்ல இனிக்கும் சுடர்தமிழ்ச் செம்மையென
உள்ளம் இனிக்கும் உவந்;து!

160.
சித்தத்தில் சிக்கிய சின்னவளே! செந்தமிழே!
மொத்தத்தில் மூழ்கினேன் மோகத்தில்! - வித்தகியே!
இத்திறத்தில் நானிருக்க, என்னாளும் நீயங்குப்
பத்திரமாய்ப் பாடுகிறாய் பாட்டு!

(தொடரும்)

6 commentaires:

  1. இனிக்குதைய்யா....!

    அருமைங்கய்யா...!

    RépondreSupprimer
  2. கொஞ்சும் தமிழெடுத்து எந்தன்
    நெஞ்மெலாம் நிறைந்திட்ட வெண்பா தந்த கவியே வணங்குகிறேன்.

    RépondreSupprimer
  3. ஐயா!

    உருகி உருகி உங்கள் ஊன் உடம்பு தானுருக்கி
    மருகி மயங்கி மடிதவழ்ந்து பா பலவியற்றி
    அருகி அழிந்திடாமல் தமிழ்த்தாயைக் காக்கின்றீர் நாம்
    பருகிப் பயன்பெற்றுப் பண்புதனைக் காக்கவென்றே ...

    RépondreSupprimer

  4. -
    சோகத்தை நற்கவியில் சொன்னாலும் முத்தமிழ்மேல்
    மோகத்தால் மெய்மறந்து மூழ்கிடுவீர்! – தேகத்தை
    வேகவைக்கும் காதலை வெண்பாவில் தொடர்ந்தெழுத
    ஏகசிந்தை உண்டோ? எழுது!

    -

    RépondreSupprimer
  5. கண்பார்த்து உயிர்நுகர்ந்து கைநழுவா காதலுக்கு
    மெய்யான அன்புதனில் மேலான இனிமையினை வெண்பாவில் பாடுகின்றீர் மெய்மறந்து படிக்கின்றேன்
    என்பாவில் வாழ்த்திவிட எனக்கில்லை உம்புலமை

    வாழ்த்துக்கள் கவிஞரே ..வாழ்கவளமுடன்

    RépondreSupprimer
  6. வணக்கம்
    கவிஞர்(ஐயா)

    சித்தத்தில் சிக்கிய சின்னவளே! செந்தமிழே!
    மொத்தத்தில் மூழ்கினேன் மோகத்தில்! என்ன அருமையான வரிகள்

    உங்கள் கவிதை மோகத்தில் நானும் மூழ்கிவிட்டேன் கவிஞரே அருமையான வரிகள் ஒவ்வொரு வரியிலும் கவிப்பா ஓடுகிறது கவிஞரே

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer