lundi 28 janvier 2013

காதல் ஆயிரம் [பகுதி - 13]




காதல் ஆயிரம் [பகுதி - 13]

121.
எங்கோ இருந்தே எனதுயிரை ஈர்த்தாளும்
செங்கோட்டி யாழின் சிறப்பிசையே! – செங்கரும்பே!
நுங்கும் குளிரிழக்கும்! நுண்மொழியோ தேன்சுரக்கும்!
இங்கு..நீ சொர்க்கம் எனககு!

122.
தேவி தரிசனம் கிட்டாதா? தேன்கவி
தூவித் தரிசனம் தோன்றாதா? – பாவியென்
ஆவி கடைசேர ஆசைகள் தீராதா?
கூவிக் குலையும் குரல்!

123.
தரிசனம் வேண்டுமடி! தண்டமிழே என்மேல்
கரிசனம் வேண்டுமடி! கண்மணியே! – அரிய
அரி..சனம் வேண்டுமடி ஆழ்ந்துருகி! உன்றன்
வரிமணம் வேண்டுமடி வாழ்வு!

124.
தூக்கம் இலாமல் துவளுதடி! வாழ்விலென்றும்
ஊக்கம் இலாமல் உளறுதடி! – தாக்குமொரு
ஏக்கம் இலாமல் எனதுயிரை ஆட்கொள்ள
ஆக்கம் அளிப்பாய் அனைத்து!

125
அன்பே! அமுதே! அருந்தமிழே! ஈடிலா
இன்பே! எழிலே இசைமழையே! - பொன்னாகும்
பண்பே! பசுமைப் படர்வளமே! உன்பார்வை
தண்பே(று) அளிக்கும் தழைத்து!

126
மாதுரைத்த செய்திகளை மாண்பாக மின்மடல்
தூதுரைத்துப் போனதடி! துன்கடலில் - மீதுரைந்து
நான்கிடக்கும் காட்சிகளை நன்றே உரைப்பதெனில்
வான்கடக்கும் சோகம் வரிந்து!

127.
ஏதென் இனிமை இளயவளே நீயின்றி!
சூதுன் விழிகள்! சுடும்!குளிரும்! – போதைதரும்!
மாதுன் நினைவுகளை மாமழையாய்ப் பெய்கின்ற
தூதேன் விடுத்தாய்த் துணிந்து

128.
பாட்டின்முன் வந்தாடும் பாவையைப் பார்த்திடவே
வீட்டின்முன் வந்தாடும் வேளையிலே! - மீட்டுமிசை
காட்டுமுன் கண்ணழகு! கன்னல் கனியழகு!
வாட்டும்என் னெஞ்சை வளைத்து!

129.
தூதொன்(று) உரைத்துத் துடிதுடிக்கச் செய்தனையே!
வாதொன்(று) உரைத்து வதைக்காதே! – மாதுனைச்
சாதென்(று) உரைத்துத் தமிழ்கொடுத்தான்! சாடுவதேன்
தீதென்(று) உரைத்து தினம்!

130.
நம்மொழி பாடி நடமிடும் பேரழகே!
செம்மொழி பாடிச் செழிப்பூட்டும்! – அம்மாடி
உன்மொழி பாடி உருகுதடி என்னெஞ்சம்!
இன்மொழி பாடி இளைத்து!

(தொடரும்)

3 commentaires:

  1. தூய தமிழ் நாட்காட்டி வாங்க
    அணுகும் முகவரி :
    சின்னப்ப தமிழர்
    தமிழம்மா பதிப்பகம் ,
    59, முதல் தெரு விநாயகபுரம்,
    அரும்பாக்கம் , சென்னை- 600106 .
    அலைபேசி - 99411 41894.

    RépondreSupprimer
  2. ஏங்கும் உந்தன் இதயஒலி கேட்டுப் போலியாய்(த்)
    தூங்கும் உம் காதலி இன்னுமா எழவில்லை!
    தாங்கும் பொறுமையுடன் சற்றுக் காத்துநில்லும்
    பாங்கி வந்திடுவாள் பரவசமுடன் உமைச்சேர..

    RépondreSupprimer
  3. ஐயா ஆயிரம் வெண்பா மாலை தொகுப்பாக வெளியிடலாமே ..

    RépondreSupprimer