jeudi 28 décembre 2017

வெண்பா மேடை - 53

வெண்பா மேடை - 53
  
குறள் வெண்செந்துறை
  
அளவில் ஒத்த இரண்டு அடிகளாய் ஒழுகிய ஓசையும் விழுமிய பொருளும் கொண்டு வருவது குறள் வெண்செந்துறை எனப்படும். இதற்கு வெள்ளைச் செந்துறை என்ற மற்றொரு பெயரும் உண்டு.
  
இரண்டடியும் ஓரெதுகை பெற்றிருக்க வேண்டும்.
  
ஓரடியில் நான்கு முதல் எத்தனைச் சீர்கள் வேண்டுமானாலும் வரும். [முதலடி 4 சீர்களைப் பெற்று வந்தால் இரண்டாம் அடியும் 4 சீர்களைப் பெறவேண்டும்] [முதலடி 6 சீர்களைப் பெற்று வந்தால் இரண்டாம் அடியும் 6 சிர்களைப் பெறவேண்டும்] இரண்டு அடிகளிலும் சீரின் எண்ணிக்கை ஒன்றாக இருக்க வேண்டும்.
  
அனைத்துச் சீர்களும், அனைத்துத் தளைகளும் இப்பாட்டில் வரலாம். [பொதுவாகக் கனிச்சீரோ, நான்கசைச் சீரோ இப்பாட்டில் அதிகம் வருவதில்லை] [ ஈரசைச் சீரும், காய்ச்சீரும் அதிகம் வந்துள்ளதைக் காண்கிறோம்.] [ நான்கு சீர் அடிகளை உடைய பாடல்தான் அதிகமாக உள்ளது]
  
நாற்சீரடியாயின் 1, 3 ஆம் சீர்களில் மோனை அமைய வேண்டும். [நான்குக்கு மேல் சீர்கள் வரும் அடியுள் அதன் பாதியில் மோனை அமைவது நன்று]
  
விழுமிய பொருள் என்பது, உயர்ந்த கருத்துகளைப் பாடுவதாம். நாட்டின் உயர்வுக்கும் மனக்கூட்டின் உயர்வுக்கும் உடைய கருத்துகளைத் தீட்டுவதாம். [இழிவுடைய கருத்துகள், சிற்றின்பக் கருத்துகள் இப்பாடலில் வருதல் கூடா]
  
ஒழுகிய ஓசை என்பது, எங்கும் தடையின்றி ஆற்றுநடையாய்ச் செல்வதாம். இனிய ஓசையுடன் அமைவதாம்.
  
அளவடிக் குறள் வெண்செந்துறை
  
1.
மொழியைக் காக்க முன்னே எழுந்து
வழியைப் படைத்து வாழ்வை வெல்க!
  
2.
தலைகொடுத் தேனும் தாய்மொழி காக்க
அலையெனப் பொங்கி அரும்பணி செய்க!
  
3.
கன்னல் தமிழைக் கண்ணெனக் காத்து
மன்னும் புகழை மாண்புறக் காண்க!
  
4.
அன்னைத் தமிழை அகத்துள் பதித்துப்
பொன்னை நிகர்த்த பொலிவைப் பெறுக!
  
5.
பண்டைத் தமிழின் பண்பை யெல்லாம்
மண்டைக் குள்ளே மணக்க வாழ்க!
  
6.
மூத்த தமிழ்த்தாய் மொழிந்த நுால்களைக்
காத்து நெஞ்சம் கனிபோல் கமழ்க!
  
7.
தொண்டு செய்யும் துாய எண்ணம்
நண்ணும் தமிழை நன்றே பயில்க!
  
8.
செம்மைத் தமிழே அம்மை வடிவாம்!
நம்மைக் காக்கும் நாடித் தொழுக!
  
9.
இன்பத் தமிழே அன்பின் விதையாம்
என்றும் எங்கும் ஏத்திப் புகழ்க!
  
10.
பற்றுடன் தமிழைப் பாடிக் களித்துப்
பொற்றுடன் ஆக்கம் போற்றிப் புனைக!
  
அளவடியால் வந்த குறள் வெண்செந்துறை ஒன்றை, விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து தங்கள் வெண்செந்துறையைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
27.12.2017

1 commentaire: