samedi 4 décembre 2021

விருத்த மேடை - 57

 


விருத்த மேடை - 57

 

எண்சீர் விருத்தம் - 10

 

எட்டுக்காய்

 

மந்தாரை மலர்ந்திருக்க மதுவுண்ணும் வண்டெங்கே?

   மாமுல்லைக் கொடிபடர வளருங்கொள் கொம்பெங்கே?

சிந்தாத மணியிருக்க ஒளியெங்கே சென்றதெனத்

   தேரூரில் பலர்கூடித் தெரிந்துகொளக் கேட்டதற்கு

நந்தாத பரஞான அமுதுண்டு தெவிட்டெறியும்

   நற்பரமா னந்தனருள் பெறச்சென்ற நண்பா!நீ

வந்தாலே மறுமொழியும் வகுப்பமெனச் சோதிடநுால்

   வல்லாரும் கூறுகின்றார் வகையேதும் அறியேனே!

 

[கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை]

 

வீரியம் பெருக்கு! [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

உள்ளொளியும் உடலொளியும் ஓங்கிடவே வேண்டுகிறேன்

   ஊழ்வலியும் உயிர்வலியும் நீங்கிடவே வேண்டுகிறேன்!

செல்வழியும் சேரிடமும் சிறந்திடவே வேண்டுகிறேன்

   சிந்தனைகள் செம்மாந்து பிறந்திடவே வேண்டுகிறேன்!

சொல்மொழியும் சுவையினமும் இணைந்திடவே வேண்டுகிறேன்!

   தொண்டுளமும் அன்புளமும் மணந்திடவே வேண்டுகிறேன்

வெல்வழியும் வீரியமும் பெருகிடவே வேண்டுகிறேன்!

   வேங்கடவா! உன்னருளைப் பருகிடவே வேண்டுகிறேன்!

 

 [பாட்டரசர்]

 

ஓரடில் எட்டுக் காய்ச்சீர்கள் வரும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு

04.12.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire