jeudi 2 décembre 2021

விருத்த மேடை - 56

 


 விருத்த மேடை - 56

 

எண்சீர் விருத்தம் - 9

 

ஆறு காய் + மா + தேமா

 

தமிழ்மொழியின் பெருமைதன்னை உலகறிய எடுத்தறைந்த

   தனிப்பறையின் பேரோசை தணிந்த தேயோ!

துமியுரைத்த கவியரசன் சுவையிளக்கக் கம்பனுக்காய்த்

   துாதுவந்த பாதமலை துவண்ட வேயோ!

அமிழ்ந்துறங்கும்  தமிழர்களை அடிமையிருள் அகன்றதென

   அழைத்தெழுப்பும் கோழிகுரல் அடைத்த தேயோ?

குமிழ்நுரையின் மலையருவிச் சுழல்விழுந்து குருகுலத்துச்

   சுப்ரமண்ய ஐயருடல் மறைந்த கொள்கை! 
   

[நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை]

 

வையத் தலைமைகொள் [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

பன்மொழிகள் விளையாடும் பாரரங்கில் பாட்டரசே!
   பண்ணரசே! பண்பரசே! பறையைத் தட்டு!

தென்மொழிகள் தொழுகின்ற செந்தமிழைத் திசையெட்டும்
   செப்பிடவே சந்தப்பா தீட்டிக் கொட்டு!

பொன்மொழிகள் புகழ்மொழிகள் புனைமொழிகள் பூத்திடவே
   புவித்தமைமை ஏற்றிடுவாய் புகழைத் தொட்டு!

வன்மொழிகள் நீங்கிவிடும்! இன்மொழிகள் ஓங்கிவரும்!

   வாழ்வினிக்க அன்பருளாம் மாலை கட்டு!

 

 [பாட்டரசர்]

 

நான்கு காய் ஒருமா தேமா என்ற வாய்பாட்டில் அறுசீர் விருத்தம் உள்ளது. ஆறு காய் ஒருமா தேமா என்ற வாய்பாட்டில் அமைந்த எண்சீர் விருத்தம் இது. நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் ஏழாம் சீரும் மோனையுறும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
02.12.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire