mardi 7 décembre 2021

விருத்த மேடை - 58

 


விருத்த மேடை - 58

 

எண்சீர் விருத்தம் - 11

 

எட்டுக்காய் [வேறு]

 

அன்னியமா சடையாரும் பின்னியமா சடையாரும்

   அடிமாற நடித்தாரும் முடிமாறன் அடித்தாரும்

உன்னுமற மொழிந்தாரும் பின்னுமற மொழிந்தாரும்

   உகைத்திடுமா னேற்றாரும் மிகைத்திடுமா னேற்றாரும்

என்னகத்தா முரியாரும் கைந்நாகத்தா முரியாரும்

   எருக்கிதழி மணத்தாரு மருக்கிதழி மணத்தாரும்

வன்னிவடி வனத்தாரும் சென்னிவடி வனத்தாரும்

   வருகருணைப் பதியாரும் பெருங்கருணைப் பதியாரே!

 

[சைவ எல்லப்ப நாவலரின் அருணைக் கலம்பகம் - 54]

 

இப்பாடல் விருத்தமேடை - 57ல் உள்ள எட்டுக் காய் எண்சீர் விருத்தமே யாகும். சைவ எல்லப்ப நாவலர் இவ்விருத்தத்தில் ஒவ்வோர் அரையடியிலும் 1, 3 சீர்கள் எதுகை பெறும் வண்ணம்  பாடியுள்ளார். [அன்னிய - பின்னிய] [அடிமாற - முடிமாறன்] [உன்னுமற - பின்னுமற]....... [வருகருணை - பெருங்கருணை]   

 

கண்ணீரில் குளிக்கின்றேன்!

 

கற்கண்டு மொழியாளே! நற்கெண்டை விழியாளே!

   கண்ணுன்னைத் தேடுதடி! பெண்ணே..நீ பிரிந்ததுமேன்?

நற்றொண்டுச் சுந்தரியே! பொற்கொடியே! என்னுயிரே!

   நடுத்தெருவில் எனைவிட்டுக் கொடுந்துயரைக் கொடுத்ததுமேன்?

வெற்றென்று நினைத்தாயோ? கற்பகமே துடித்தாயோ?

   வெந்துருகி வாடுகிறேன்! நொந்துருகி ஓடுகிறேன்!

சற்றென்று சிறுநொடியில் முற்றுமெனை மறந்ததுமேன்?

   தண்ணிலவே தவிக்கின்றேன்! கண்ணீரில் குளிக்கின்றேன்!

 

[பாட்டரசர்]

 

ஓரடில் எட்டுக் காய்ச்சீர்கள் வரும். இவ்வாறு நான்கடிகள் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனையுறும். ஒவ்வோர் அரையடியில் 1ஆம் சீரும் 3 ஆம் சீரும் எதுகையால் ஒன்றும்.

விரும்பிய தலைப்பில் இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
07.12.2021

Aucun commentaire:

Enregistrer un commentaire