mercredi 1 décembre 2021

விருத்த மேடை - 55

 


விருத்த மேடை - 55

 

எண்சீர் விருத்தம் - 8

 

 விளம் + விளம் + விளம் + மா
   விளம் + விளம் + விளம் + மா

குண்டலம் குழைதிகழ் காதனே என்றும்,

   கொழுமழு வாட்படைக் குழகனே என்றும்,

வண்டலம் பும்மலர்க் கொன்றையன் என்றும்,

   வாய்வெரு  வித்தொழு தேன்,விதி யாலே!

பண்டைநம் பலமன முங்களைந் தொன்றாய்ப்

   பசுபதி பதிவின விப்பல நாளும்,

கண்டலங் கழிக்கரை ஓதம்வந் துலவும்

   கழுமல வளநகர்க் கண்டுகொண் டேனே!

 

 [சுந்தரர் தேவாராம் - திருக்கழுமலம் ]

 

விதையினைத் தெரிந்து இடு [பாரதியின் புதிய ஆத்திசூடி]

 

நீர்வளம் நிலவளம் ஆய்ந்துணர்! உழைப்பே

   நிறைவளம் நல்கிடும் ஏற்றுணர்! நெஞ்சுள்

நேர்வளம் ஓங்கிடும் குறளுணர்! இன்ப

   நீடுளம் பெற்றிடும் அருளுணர்! வாழ்வில்

சீர்வளம் சேர்த்திடும் தமிழுணர்! மின்னும்

   தேர்வலம் தந்திடும் மாண்புணர்! ஆல

வேர்வளம் தாங்கிடும் தகையுணர்! நன்றே

   விதைவளம் ஈந்திடும் பயனுணர் தோழா!

 

 [பாட்டரசர்]

 

அரையடி தோறும் இறுதியில் [நான்காம் சீர்] மாச்சீரும், முதல் மூன்று இடங்களில் விளச்சீரும் வரும். நான்கடிகளும் ஓரெதுகை பெறும். முதல் சீரும் ஐந்தாம் சீரும் மோனை ஏற்கும்.

ஆத்திசூடி நுாலில் உள்ள ஓரடியைத் தலைப்பாகக் கொண்டு இவ்வகை எண்சீர்  விருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
01.12.2021

 

 

Aucun commentaire:

Enregistrer un commentaire