mercredi 30 octobre 2019

ஆறாரச் சக்கரம்


ஆறாரச் சக்கரம்
[ஈற்றடி மாலை மாற்றாய் அமைந்தது]
  
கல்வியே கண்!
[நேரிசை வெண்பா]
  
வண்ணணெறி கற்கவே யேகுக!வாழ்வின்ப
மண்ணெறி வாகே!மால் வேகமுறு! - தண்ணென்ப
பண்பணிகள்! தேவிவேண் டிப்..படி! நீசேம
வண்மண் படி!படி..பண் மண்!
  
அருஞ்சொல் விளக்கம்
  
வாகு - அழகு
மால் - காற்று
தண் - குளிர்
சேமம் - காவல், இன்பம்
வண் - வண்மை
பண் - இசைப்பாட்டு
  
இஃது ஆறாராய், குறட்டின் நடுவே 'வே' நின்று, 'கல்வியே கண்' என்னும் பெயர் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஆறெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] பன்னிரண்டு எழுத்துப்பெற்று, அவ்வெழுத்து மாலை மாற்றாய் முடிந்தது. இந்நேரிசை வெண்பாவின் முதல் மூன்றடிகள், ஒவ்வொன்றும் 17 எழுத்துக்களைப் பெற்றது. ஈற்றடி 12 எழுத்துக்களைக் கொண்டது. செய்யுட்கண் 63 எழுத்துக்கள் உள்ளன. சக்கரத்தில் 55 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின் முனைதொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலடி முற்றி, அடுத்துள்ள இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வலப்பக்கத்தாரின் முனையிறுதி இறங்கி இரண்டாமடி முற்றி, அடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி வடப்பக்கத்தாரின் மேலேறி மூன்றாமடி முற்றி, செய்யுள் தொடங்கி எழுத்தில் நான்காமடி தொடங்கி வட்டை வழியிடஞ்சுற்றிச் சென்று நான்காமடி முற்றியது. வட்டத்தில் அமைந்த அவ்வடி மாலை மாற்றாய் அமைந்தது.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
30.10.2019

1 commentaire: