mercredi 26 décembre 2018

சிந்துப்பா மேடை - 1



சிந்துப்பா மேடை - 1

தமிழ்மொழி இயல் இசை, நாடகம் என்று செழிப்புடன் திகழ்வதால், முத்தமிழாகப் போற்றி மகிழ்கிறோம்.

இயற்றமிழ் என்பது கருத்தை உணர்த்துவதை நோக்கமாக உடையது என்றும், இசைத்தமிழ் என்பது இசையின்பம்  அளித்தலை முதன்மை நோக்கமாக உடையது என்றும், முனைவர் இரா. திருமுருகனார் உரைப்பார். [சிந்துப்பாடல்களில் யாப்பிலக்கணம் பக்கம் - 3]

பேச்சு, உரைநடை, செய்யுள்  ஆகியவை இயற்றமிழாகும். இயற்றமிழ்ப் செய்யுள் இயற்பா எனப்படும். வெண்பா, ஆசிரியப்பா, வஞ்சிப்பா. மருட்பா இயற்றமிழைச் சேரும்.

இசைத்தமிழ்ப் பாடல் இசைப்பா எனப்படும். கலிப்பா, பரிபாடல், தாழிசை, விருத்தம், துறை, சந்தப்பா, வண்ணப்பா, சிந்துப்பா, உருப்படி அகியவை இசைப்பாவாகும்.

இயலும் இசையும் இணைந்து வருவது நாடகத்தமிழாகும்.

இசைப்பாக்களில், தாளமின்றிப் பண்ணுடன் மட்டும் பாடப்படுவன என்றும், பண்ணுடனும் தாளத்துடனும் பாடப்படுவன என்றும் இருவகையுண்டு.

சிந்து என்னும் இசைப்பா, இசைத் தாளத்துடன் பாடிப்பாடி இயற்ற வேண்டும். இரண்டு சமமான அடிகள் ஓரெதுகை பெற்றுத் தாளத்துடன் நடப்பது சிந்துப்பாவாகும். [சிறுபான்மை நான்கடி பெற்றுவருவதும் உண்டு] 

கிளிக்கண்ணி

நெஞ்சில்  உரமுமின்றி
நோ்மைத் திறமுமின்றி
வஞ்சனை சொல்வாரடீ - கிளியே!
வாய்ச்சொல்லில் வீரரடீ!

[மகாகவி பாரதியார்]

ஓரெதுகையில் அமைந்த இரண்டடிகள் கண்ணி என்று பெயர்பெறும். கிளியே என்ற மகடூஉ முன்னிலை உடைமையால் கிளிக்கண்ணி என்று பெயர்பெற்றது. கிளிக்கண்ணி பலவகை அடிகளாலும் தாள நடைகளாலும் நடக்கும். சீர், தளை வரையறை இல்லை.

பாரதியின் கிளிக்கண்ணியில் நெஞ்சில் - திறமுமின்றி ஓரடியாகும். வஞ்வனை - வீரரடீ மற்றோர் அடியாகும். நெஞ்சில் - வஞ்சனை எதுகையாகும். நெஞ்சில் - நேர்மை, வஞ்சனை - வாய்ச்சொல் மோனையாகும்.

இக்கண்ணி, நேரசையில் தொடங்கும் அரையடி 7 எழுத்துக்களையும், நிரையசையில் தொடங்கும் அரையடி 8 எழுத்துக்களையும் பெற்றுவரும்.  ஒற்றுகளை நீக்கி எழுத்துகளை எண்ண வேண்டும். [இரண்டாம் அரையடிக்குப் பின் கிளியே  - தனிச்சொல் வரும். இச்சொல்லைக் கணக்கில் சோ்க்கவேண்டாம்]

நிரையசைப் பாடல்

பழமை பழமையென்று
பாவனை பேசலன்றிப்
பழமை இருந்தநிலை - கிளியே!
பாமரர் ஏதறிவார்?

[மகாகவி பாரதியார்]

வாய்ச்சொல் வீரர்!

வாக்குப் பொறுக்கிடவே
வாசல் வலம்வருவார்!
நாக்குப் பலவுடையார் - கிளியே!
நம்மின் தலையறுப்பார்!

வெள்ளை உடையணிந்து
கொள்ளை அடித்திடுவார்!
இல்லை துளியொழுக்கம் - கிளியே!
எங்கே இனம்சிறக்கும்!

வெற்றுப் பயல்கூட்டம்
விழுந்து வணங்கிடுவார்!
சற்றும் இதயமிலார் - கிளியே!
தலைமை நிலையடைந்தார்!

கால்கைப் பிடித்திடுவார்!
கடுகேனும் மானமிலார்!
வேல்கைத் தமிழினத்தைக் - கிளியே!
விற்றுப் பிழைத்திடுவார்!

மேடை உரைபொழியும்
வெற்றி மறவரவர்!
ஆடை யணிமணிகள் - கிளியே!
ஆயிரம் கோடியடீ!

மண்ணின் நலமுரைப்பார்!
மக்கள் வளமுரைப்பார்!
கண்ணில் பணப்புதையல் - கிளியே!
காக்கும் செயல்புரிவார்!

அடிபிடி நெஞ்சகரும்
தடியடி வஞ்சகரும்
குடிவெறி கூட்டிடுவார்! - கிளியே!
குறள்நெறி சாய்த்திடுவார்!

ஆட்சி இருக்கையினை
அடைய அணிவகுப்பார்!
மாட்சி அழித்திடுவார் - கிளியே!
மாளாப் பொருளடைவார்!

மன்னரின் ஆட்சியினை
மக்களின் ஆட்சியென
இன்னும்..நீ நம்புவதோ? - கிளியே!
எங்கே..நீ வாழுவதோ?

பொறுக்கித் திரிபவரும்
பொல்லாக் கொடியவரும்
முறுக்கி உலாவருவார் - கிளியே!
நறுக்கி அவர்..அகற்று!

[பாட்டரசர் கி. பாரதிதாசன்]

விரும்பிய பொருளில்  ஐந்து கண்ணிகள் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
07.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire