jeudi 20 décembre 2018

வெண்பா மேடை - 129


வெண்பா மேடை - 129
  
நிரல் வெண்பா
  
தொகையாக உள்ள பெயர்களை ஒன்றன்பின் ஒன்றாக உரைப்பது நிரல் வெண்பாவாகும். திருக்குறளுக்கு உரையெழுதிய 1. தருமர், 2. மணக்குடவர், 3. தாமத்தர், 4. நச்சர், 5. பரிதி, 6. திருமலையர், 7. பரிமேலழகர், 8. மல்லர், 9. கவிப்பெருமாள், 10. காளிங்கர் ஆகியோர்தம் பெயர்களை கீழுள்ள வெண்பா உரைப்பதைப் படித்து மகிழவும்.
  
திருக்குறள் உரையாளர் நிரல் வெண்பா!
  
தருமா், மணக்குடவர், தாமத்தர், நச்சர்,
பரிதி, திருமலை யர்,பரி மேலழகர்,
மல்லர், கவிப்பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நுாற்[கு]
எல்லை உரையியற்றி னார். [பழம் பாடல்]
  
எட்டுத்தொகை நிரல் வெண்பா!
நற்றிணை நல்ல குறுந்தொகை ஐங்குறுநூ[று]
ஒத்த பதிற்றுப்பத்[து] ஓங்கு பரிபாடல்
கற்றறிந்தார் ஏத்தும் கலியோ[டு] அகம்புறமென்[று]
இத்திறத்த எட்டுத் தொகை.
  
[பாரதம் பாடிய பெருந்தேவனார்]
  
பத்துப்பாட்டு நிரல் வெண்பா
  
முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வளமதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடைக் கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து [பழம் பாடல்]
  
1. திருமுருகாற்றுப்படை , 2. பொருநராற்றுப்படை, 3. சிறுபாணாற்றுப்படை,
4. பெரும்பாணாற்றுப்படை, 5. முல்லைப்பாட்டு, 6. மதுரைக் காஞ்சி, 7. நெடுநல் வாடை,
8. குறிஞ்சிப் பாட்டு, 9. பட்டினப்பாலை, 10. மலைபடு கடாம்
  
பதினெண் கீழ்க்கணக்கு நிரல் வெண்பா
  
நாலடி நான்மணி நானாற்ப[து] ஐந்திணை,முப்
பால்,கடுகம், கோவை, பழமொழி, மாமூலம்,
இன்னிலை,சொல் காஞ்சியுடன், ஏலாதி என்பவே
கைந்நிலைய வாங்கீழ்க் கணக்கு! [பழம் பாடல்]
  
1. நாலடியார், 2. நான்மணிக்கடிகை, 3. இன்னா நாற்பது, 4. இனியவை நாற்பது, 5. கார் நாற்பது, 6. களவழி நாற்பது, 7. ஐந்திணை ஐம்பது, 8. திணைமொழி ஐம்பது, 9. ஐந்திணை எழுபது, 10. திணைமாலை நுாற்றைம்பது, 11. திருக்குறள், 12. திரிகடு, 13.ஆசாரக்கோவை, 14. பழமொழி, 15. சிறுபஞ்சமூலம், 16. கைந்நிலை, 17. முதுமொழிக்காஞ்சி, 18 ஏலாதி
  
ஐங்குறுநூறு பாடியவர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
மருதமோ ரம்போகி நெய்தல மூவன்
கருதும் குறிஞ்சி கபிலர் - கருதிய
பாலையோத லாந்தைப் பனிமுல்லைப் பேயனே
நூலையோ தைங்குறு நூறு. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - பேயனார்
மருதம் - ஓரம்போகியார்
நெய்தல் - அம்மூவனார்
பாலை - ஓதலாந்தையார்.
  
கலித்தொகை பாடியோர் பெயர்களின் நிரல் வெண்பா!
  
பெருங்கடுங்கோன் பாலை, கபிலன் குறிஞ்சி,
மருதனிள நாகன் மருதம், - அருஞ்சோழன்
நல்லுருத்தி ரன்முல்லை, நல்லந் துவன்நெய்தல்,
கல்விவலார் கண்ட கலி. [பழம் பாடல்]
  
குறிஞ்சி - கபிலர்
முல்லை - சோழன் நல்லுருத்திரனார்
மருதம் - மருதனிள நாகனார்
நெய்தல் - நல்லந்துவனார்
பாலை - பெருங்கடுங்கோ.
  
பரிபாடலில் உள்ள பாடல் எண்ணிகையை உரைக்கும் நிரல் வெண்பா!
  
திருமாற் கிருநான்கு செவ்வேட்கு முப்பத்
தொருபாட்டுக் காடுகாட் கொன்று - மருவினிய
வையையிரு பத்தாறு மாமதுரை நான்கென்ப
செய்யபரி பாடற் றிறம். [பழம் பாடல்]
  
திருமால்லுக்கு 8, செவ்வேளுக்கு 31, காடுகாளுக்கு (காளிக்கு) 1, வையைக்கு 26, மதுரைக்கு 4.
  
அகத்திணை நிலையை உணர்த்தும் நிரல் வெண்பா!
  
போக்கெலாம் பாலை புணர்தல் நறுங்குறிஞ்சி
ஆக்கமளி யூட லணிமருதம் - நோக்கொன்றி
இல்லிருத்தல் முல்லை யிரங்கியபோக் கேர்நெய்தல்
புல்லுங் கவிமுறைக் கொப்பு. [பழம் பாடல்]
  
ஆழ்வார் பன்னிருவர் பெயர்களின் நிரல் வெண்பா
பொய்கையார், பூதத்தார், பொற்பேயார், பூம்மழிசை,
மெய்மதுரர், நம்மாழ்வார் வெல்சேரர் - துய்பட்டர்,
மின்னாண்டாள், நற்றொண்டர், இன்பாணர், வன்கலியர்
பன்னிருவர் என்றே பகர்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
காப்பிய நிரல் வெண்பா
சிந்தா மணி,சீர் திகழ்சிலம்பு, மேகலை,
பந்த வளையா பதி,கேசி, - சிந்தையுறும்
சூளா மணி,நீலம், துாயுதய நாகமைந்தர்
ஆளும் யசோதரம் ஆம்!
  
[பாட்டரசர் கி. பாரதிதாசன்]
  
ஐம்பெருங்காப்பியம்
1. சீவக சிந்தாமணி, 2. சிலப்பதிகாரம், 3. மணிமேகலை, 4. வளையாபதி, 5. குண்டலகேசி
  
ஐஞ்சிறுகாப்பியம்
1. சூளாமணி, 2. நீலகேசி, 3. உதய குமார காவியம், யசோதர காவியம், 5. நாக குமார காவியம்
  
இவ்வாறு அமைந்த 'நிரல் வெண்பா' ஒன்றை விரும்பிய பொருளில் பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
"பாவலர் பயிலரங்கம்" என்ற குழுவில் இணைந்து நிரல் வெண்பாவைத் தனிப்பதிவாகப் பதிவிட வேண்டுகிறேன்!
  
அன்புடன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
20.12.2018

Aucun commentaire:

Enregistrer un commentaire