dimanche 23 octobre 2022

பஞ்சரத்தின மாலை


 

வணக்கம்!

 

கனடா நாட்டின் விழுத்தெழு பெண்ணே என்ற அமைப்பின்
உலகத் தமிழ்ப்பெண் ஆளுமை  விருது பெற்ற
பாவலர் கலைப்புட்பா அவர்களை வாழ்த்தும்

ஐந்து மணி வெண்பா!

 

வைரம்

 

கனிந்த மனமும் கமழ்கின்ற தொண்டும்

நனைந்த மழைமண் நலமும் - புனைந்தகவி

அத்தணையும் மின்வைரம்! அன்புக் கலைப்புட்பா

சித்தணையும் செந்தமிழ்ச் சீர்!

 

நீலம்

 

சீரோங்கி வாழ்க! சிறப்போங்கி வாழ்க!நற்

பேரோங்கி வாழ்க! பெருமையெலாம் - வேரோங்கித்

வாழ்க! எழில்நீல வண்ணக் கலைப்புட்பா

வாழ்க தமிழ்போல் மணந்து!

 

முத்து

 

மணமளிக்கும் தாழை!  வளமளிக்கும் வாழை!

குணமளிக்கும்  கூர்மதி கொள்கை -  உணர்வளிக்கும்

ஈழ அணிமுத்[து] எழுதும் கலைப்புட்பா

சோழ மரபெனச் சொல்லு!

 

பவளம்

 

சொல்லும் சுவையளிக்கும்! சொக்கும் மதுவளிக்கும்!

சொல்லும் இடத்தில் செயல்மணக்கும்! - வெல்லுமெழில்

நற்பவள வான்விடியல் நல்கும் கலைப்புட்பா

பொற்கவிதை பூக்கும் பொழில்!

 

மாணிக்கம்

 

பூத்த பொழிலழகும், பொங்கும் அலையழகும்,

மூத்த தமிழழகும் முன்னேந்திக் - காத்த

மலைப்பொற்பா கொண்டொளிரும் மாணிக்கம் மங்கை  

கலைப்புட்பா வாழ்க கனிந்து!

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு

தொல்காப்பியர் கழகம் பிரான்சு

13.10.2022

 

1 commentaire: