கலிவிது்தம் - 5
[வெண்டளையால் அமைந்தது]
கிள்ளையொடு பூவை அழுத, கிளர்மாடத்
துள்ளுறையும் பூசை அழுத, உருவறியாப்
பிள்ளை அழுத, பெரியோரை என்சொல்ல?
வள்ளல் வனம்புகுவான் என்றுரைத்த மாற்றத்தால்
[கம்பர். அயோத்தியா.நகர் நீங்கு - 96]
வாரண மாயிரம் சூழ வலஞ்செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும்
தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான்!
[ஆண்டாள், நாச்சியார் திருமொழி]
சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் செந்தமிழைப்
பாடிக் களித்துப் பறக்கும் கவியுள்ளம்!
நாடி யடையும் நலந்தரும் நல்லருளை!
ஓடி மறையும் உயிர்வினை யாவுமே!
[பாட்டரசர்]
கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.
வெண்டளையால் அமைந்த கலிவிருத்தம் ஒன்று விரும்பிய பொருளில் இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
10.07.2022

Aucun commentaire:
Enregistrer un commentaire