samedi 2 juillet 2022

கலிவிருத்தம் - 2

 

கலிவிருத்தம் - 2

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம்

 

சொற்றுணை வேதியன் சோதி வானவன்!

பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்

கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்

நற்றுணை யாவது நமச்சி வாயவே!

 

பூவினுக் கருங்கலம் பொங்கு தாமரை!

ஆவினுக் கருங்கலம் அரனஞ் சாடுதல்!

கோவினுக் கருங்கலங் கோட்ட மில்லது!

நாவினுக் கருங்கலம் நமச்சி வாயவே!

 

இல்லக விளக்கது இருள்கெ டுப்பது!

சொல்லக விளக்கது சோதி யுள்ளது!

பல்லக விளக்கது பலருங் காண்பது!

நல்லக விளக்கது நமச்சி வாயவே!

 

[திருநாவுக்கரசர் தேவாரம்]

 

வயிரவான் பூணணி மடங்கல் மொய்ம்பினான்

உயிரெலாம் தன்னுயிர் ஒக்க ஓம்பலால்

செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ்

உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்!

 

[கம்பன், பால. அரசியல் - 10]

 

அன்பெனும் தேனதி அகத்தில் பாய்ந்திடும்!

துன்பெனும் வல்வினை துார ஓடிடும்!

நன்பெனும் பண்பினை நாளும் நல்கிடும்!

இன்பெனும் தமிழினை என்றும் ஏத்துவோம்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும். விளம் வரும் இடங்களில் மாங்காய்ச்சீர் அருகி வரும்.

 

விளம் + விளம் + குறிலீற்றுமா + கூவிளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
18.06.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire