samedi 2 juillet 2022

கலிவிருத்தம் - 1

கலிவிருத்தம் - 1

 

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம்

 

உலகம் யாவையும் தாமுள ஆக்கலும்

நிலைபெ றுத்தலும் நீக்கலும் நீங்கலா

அலகி லாவிளை யாட்டுடை யார்அவர்

தலைவர் அன்னவர்க் கேசரண் நாங்களே!

 

[கம்பம், கடவுள் வணக்கம்]

 

உலகெ லாமுணர்ந் தோதற் கரியவன்!

நிலவு லாவிய நீர்மலி வேணியன்!

அலகில் சோதியன்! அம்பலத் தாடுவான்!

மலா்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!

 

[சேக்கிழார். பெரிய புராணம் - 1]

 

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்றொரு

பூசை முற்றவும் நக்குபு புக்கென

ஆசை பற்றி அறையலுற் றேன்மற்றிக்

காசில் கொற்றத் திராமன் கதையரோ!

 

[கம்பன். பாயிரம் - 4]

 

ஒற்றி மேவிய உத்தம னே!மணி

தெற்றி மேவிய தில்லையப் பா!விழி

நெற்றி மேவிய நின்மல னே!உனைப்

பற்றி மேவிய நெஞ்சமுன் பாலதே!

 

[வள்ளலார். திருவருட்பா - 1098]

 

உலகு நின்னருள்! ஒள்ளொளி நல்கிடும்

நிலவு நின்னருள்! நீர்,வளி, தீ,வெளி

பொலிவு நின்னருள்! பொற்கவி நற்றிற

வலிவு நின்னருள்! வந்தருள் செய்கவே!

 

[பாட்டரசர்]

 

கண்ணன் நல்லடி கண்மலர் மேவிட

மண்ணில் வந்துறும் வல்வினை மாய்ந்திடும்!

எண்ணம் சீர்பெற இன்றமிழ் கற்றிட

விண்ணின் வீடென மேதினி மின்னிடும்!

 

[பாட்டரசர்]

 

கலிவிருத்தம் ஓரடியில் நான்கு சீர்களைப் பெறும். நான்கடிகள் ஓரெதுகையில் அமையும். ஒன்று மூன்றாம் சீர்களில் மோனை வரும்.

 

மேலுள்ள கலிவிருத்தம்  குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் அமைந்தது.

 

குறிலீற்று மா என்றால் என்ன?

 'உலகம்' என்ற மாச்சீர் இறுதியில் கம் குறிலொற்று வந்தது. 'நிலவு' என்ற மாச்சீர் இறுதியில் வு குறில் வந்தது. குறிலையோ, குறிலொற்றையோ இறுதியாகப் பெற்றுவரும் மாச்சீர், குறிலீற்று மாச்சீர் எனப்படும்.

 

இவ்வகைக் கலிவிருத்தத்தில் கூவிளம் வரும் இடங்களில் மாங்காய் அருகி வரும். மேலுள்ள முன்றாம் பாடலில் 'றேன்மற்றிக்' என விளம் வரும் இடத்தில் மாங்காய் வந்தது.

 

மேலும் 2, 3, ஆம் இடங்களில் மாச்சீர்வரின் அடுத்தசீர் நிரை முதலாகும், மேலுள்ள  மூன்றாம் பாடலில் பற்றி, இராமன் என விளம்வரும் இடத்தில் மாச்சீர் வந்து அடுத்து வரும்சீர்  நிரை முதலால் அமைந்தது!

 

இவ்வகையில் நேரசையில் தொடங்கினால் 11 எழுத்தும், நிரையசையில் தொடங்கினால் 12 எழுத்தும்  இருக்கும்.

குறிலீற்று மா + கூளம் + கூளம்+ கூளம் என்ற வாய்பாட்டில் விரும்பிய தலைப்பில் கலிவிருத்தம் ஒன்று இயற்றுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

 
அன்புடன்
பாட்டரசர் கி. பாரதிதாசன்
கம்பன் கழகம் பிரான்சு
தொல்காப்பியர் கழகம், பிரான்சு
11.06.2022

Aucun commentaire:

Enregistrer un commentaire