samedi 15 février 2020

வெண்பா மேடை - 157   

படம் இதைக் கொண்டிருக்கலாம்: புல், வெளிப்புறம் மற்றும் இயற்கை
வெண்பா மேடை - 157
  
கொம்படைந்த வெண்பா
  
கொம்புடைந்த வெண்பாவுக்கு முரணாக அமைவது கொம்படைந்த வெண்பாவாகும்.
'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சாலை' என்ற சொல் கொம்பேற்றால் சோலை யாகும். இவ்வாறு கொம்பில்லாச் சொல்லையும் கொம்படைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்படைந்த வெண்பா' வாகும்.
  
கொம்பிலா்லா சொல்லும் கொம்படைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.
  
கீழ்காணும் பாடலில் 'தாள்' என்ற சொல் 'கால்' எனும் பெயரில் வந்துள்ளது. 'தோள்' என்ற சொல் 'புயம்' என்று வந்துள்ளது.
  
காலிங்குக் கொம்படைந்து காட்டும் புயமாகும்!
ஆலிங்குக் கொம்படைந்து மாராகும்! - பாலிங்குக்
கட்டுணவும் நல்லரசும் காணும்! பசுவாழும்
கொட்டிலும் பேழையாம் கூறு!
  
கால் - தாள்
தாள் - கொம்படைந்தால் தோள்
  
ஆல் - நஞ்சு
நஞ்சு - நெஞ்சு [மார் - மார்பு]
  
பால் - பாதி
பாதி - பொதி, போதி
பொதி [கட்டுணவு]
போதி [அரசமரம்]
  
கொட்டில் - பட்டி
பட்டி - பெட்டி [பேழை]
  
கொம்படைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
15.02.2020

Aucun commentaire:

Enregistrer un commentaire