vendredi 14 février 2020

வெண்பா மேடை - 156


வெண்பா மேடை - 156

கொம்புடைந்த வெண்பா

'செ, சே, சொ, சோ, சௌ' [எகரம், ஏகாரம், ஒகரம், ஓகாரம், ஓளகாரம்] ஆகிய எழுத்துக்கள் கொம்பேற்று வரும். 'சோலை' என்ற சொல்லில் கொம்பு உடைந்துவிட்டால் சாலை யாகும். இவ்வாறு கொம்புடைய சொல்லையும் கொம்புடைந்தபின் பின் வரும் சொல்லையும் கொண்டு பாடப்படுவது 'கொம்புடைந்த வெண்பா' வாகும்.

கொம்புடைய சொல்லும் கொம்புடைந்த சொல்லும் அதன் மற்றப் பெயர்களை ஏற்றுப் பாடலில் அமைய வேண்டும்.

கீழ்காணும் பாடலில் 'சோலை' என்ற சொல் 'பொழில்' எனும் பெயரில் வந்துள்ளது. 'சாலை' என்ற சொல் 'வழி' என்று வந்துள்ளது.

பொழிலுற்ற கொம்புடைந்து போகுவழி காட்டும்!
தொழிலுற்ற கொம்புடைந்து சூட்டும் - விழிச்சாலம்!
பாங்கிதன் கொம்புடைந்து பானைப் பெயர்கூட்டும்!
துாங்கல்தன் கொம்புடைந்து நீறு!

பொழில் - சோலை
சோலை - கொம்புடைந்தால் சாலை [வழி]

தொழில் - வேலை
வேலை - கொம்புடைந்தால் வலை [சாலம்]
விழிச்சாலம் - கண்ணுடைய வலை - துளையுடைய வலை

பாங்கி - தோழி
தோழி - கொம்புடைந்தால் தாழி [பானை]

துாங்கல் - சோம்பல்
சோம்பல் - கொம்புடைந்தால் சாம்பல் [நீறு]

கொம்புடைந்த வெண்பா ஒன்று பாடுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
14.02.2020

1 commentaire:

  1. பயனுள்ள தகவல்களுக்கு நன்றி

    நமது வலைத்தளம் : சிகரம்
    இலக்கியம் | அரசியல் | விளையாட்டு | பல்சுவை | வெள்ளித்திரை | தொழிநுட்பம் -அனைத்துத் தகவல்களையும் அழகு தமிழில் தாங்கி வரும் உங்கள் இணையத்தளம் - #சிகரம்

    https://newsigaram.blogspot.com/

    RépondreSupprimer