dimanche 3 novembre 2019

எட்டாரச் சக்கரம்


எட்டாரச் சக்கரம்
[ஆசிரியப்பாவில் அமைந்த எட்டாரச் சக்கரத்துள் ஒளிரும் குறட்பா]
  
தேவநாதா போற்றி!
[ஆசிரியப்பா]
  
தேனே! பேணிப் பேயாரி[ன்] அகமே
தானே செம்பே ரோதின் முதல்வா
வானா ராகு பேரேவு மளித்த
தாதா..தா செய்தி யுற..வண் மாரே!
பாமொழி பேசு! செம்மாக் காவே!
தா..மொழிப் பாத்து! நுானா ணயமே!
வேதத் தாகிய சீரே! குருவே!
தாதன் புனைதேரில் கானை யேகு!
தேவநா தா..வல்ல வாசுதே வா!போற்றி!
பாவ மகற்றும் வேங்கடா! பரமா!
வாகொளிர் வாழ்வோ ரேகுமூர்க் கோவே!
மேக மெய்யனே! மிகுமடி தருகவே!
  
அருஞ்சொல் விளக்கம்
  
பேயார் - பேயாழ்வார் [ஆழ்வார் பன்னிருவரில் ஒருவர்]
பேர் - பெயர், பெருமை
செய்தி - ஒழுக்கம்
ஆறு - வழி
பாத்து - ஐம்புலவின்பம்
நுானாணயம் - நுால் நாணயம்
நாணயம் - நேர்மை, கட்டுப்பாடு
தாதன் - அடியவன்
கான் - பூங்காட்டு மணம்
வாகு - அழகு
மிகுமடி - நீண்ட திருவடி
  
கருத்துரை
  
உலகைப் படைத்துக் காத்தருளும் வைகுந்தவாசனின் பொன்னுலகைப் போற்றி, அவ்வுலக வாழ்வினை வேண்டி இப்பாடல் அமைந்துள்ளது.
  
தேன்போல் இனிப்பவனே, உன்னைப் போற்றிப் பாடிய பேயாழ்வாருக்கு அகமாக நீயே இருந்தாய். செம்மைதரும் உன்பெயைரைத் தானே ஓதச் செய்தாய் முதல்வனே! அவருக்கு விண்ணுலக வாழ்வளித்தாய் தந்தையே! நான் ஒழுக்கமுற வண்மார்பை எனக்கும் தருவாய்! ஆழ்வார்கள் பாடிய பாமொழியை என்னோடு பேசுவாய்! அகமலர்ச்சியை அளிக்கின்ற பூஞ்சோலையைப் போன்றவனே! நான் பாடும் கவிதையுள் ஐம்புலவின்பத்தைத் தருவாய்! மரபு மணக்கும் நுால்களைத் தருவாய்! வேதம் உரைக்கின்ற சீரே! குருவே! அடியேன் புனைகின்ற சித்திரத்தேரில் மலர்மணத்தை ஏகுவாய்! தேவநாதா, வல்ல வாசுதேவா போற்றி! என் பாவமகற்றும் திருவேங்கடவா, பரமா, அழகொளிர வாழ்வோர் ஏகும் விண்ணுாரின் மன்னனே! கார்நிற மேனியனே! விண்ணளந்த திருவடியைக் காணும் அருளைத் தருவாய்!
  
இஃது எட்டாராய், குறட்டின் நடுவே 'தா' நின்று, எட்டெழுத்துக் குறட்டைச் சூழ் நின்று, ஆர்மேல் ஒன்பதெழுத்துப் பெற்று, சூட்டின்மேல்[வட்டம்] ஐம்பத்தாறு எழுத்துப்பெற்று வந்த ஆசிரியப்பா.
  
இச்செய்யுளில்,முதலிரண்டடிகள் சேர்ந்து 23 எழுத்துக்களைப் பெற்றன. இவ்வாறே [3 - 4] [5 - 6] [7 - 8] ஆகிய அடிகளும் 23 எழுத்துக்களைப் பெற்றன. ஈற்றில் நின்ற நான்கடிகள் ஒவ்வொன்றும் 14 எழுத்துக்களைப் பெறும். செய்யுளில் 148 எழுத்துக்கள் வந்தன. சித்திரத்தில் 137 எழுத்துக்கள் வந்தன.
  
இது, மேலாரின்முனை தொடங்கிக் கீழாரின் முனையிறுதி சென்று முதலிரண்டடி முற்றி. அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யதனெதிர் கீழாரின்முனை இறுதி சென்று மூன்று நான்காமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்துக் கீழாரின்முனை தொடங்கி யதனெதிர் ஆரின் இறுதிமுனை சென்று ஐந்து ஆறாமடி முற்றி, அதனையடுத்த இடப்பக்கத்து ஆரின்முனை தொடங்கி யெதிர்நின்ற மேலாரின் முனையிறுதி சென்று ஏழு எட்டாமடி முற்றி, முதலடி தொடங்கிய 'தே' எழுத்திலிருந்து வட்டைவழியே யிடஞ்சுற்றி ஈற்று நான்கடிகள் முற்றியவாறு காண்க.
  
செய்யுள் தொடங்கி ஆரில் குறித்துள்ள 1, 2, 3, 4 என்ற எண்களின் முறையே இடஞ்சுற்றிப் படிக்கக் கீழுள்ள குறட்பா பிறக்கும்.
  
பேராழிக் தண்ணனைப் பேசுகின்ற நுால்யாவும்
சீரோதித் தேனளிக்கும் செப்பு!
  
தண்ணன் - குளிர்ந்தவன்
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
03.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire