jeudi 21 novembre 2019

சிலுவைச் சித்திர கவிதை


சிலுவை ஓவியக் கவிதை
  
வானரசே வாராய்!
வஞ்சி விருத்தம் [மா+மா+காய்]
  
வானே! கோனே.. வா!பாரே!
தேனே! தேரே! பாவா..வா!
கானே! கா!வா வாகே..நீ
தானே சீரே தருவாயே!
  
அருஞ்சொற்பொருள்
  
கோன் - அரசன்
பார் - உலகம்
பாவன் - கவிஞன்
கான் - மணம்
வாகு - ஒளி
  
கருத்துரை
  
வானாகத் திகழ்கின்ற இறைவனே, எங்கள் அரசனே, வாராய்! புவியாய்ச் சுழல்பவனே, தேனாய் இனிப்பவனே, தேரழகு கொண்டவனே, உயிர்களின் வாழ்வைத் தீட்டும் பாவலனே, வாராய்! பூஞ்சோலையாய் மணப்பவனே, என்னைக் காப்பாய்! இருளீக்கும் பேரோளியே, வாராய்! நான் கேட்கும் முன்னே என் மனமறிந்து வாழ்வோங்கும் சீரைத் தருவாய்!
  
இவ்வஞ்சி விருத்தம் 29 எழுத்துகளைப் பெறும். சிலுவை ஓவியம் 20 எழுத்துக்களைப் பெறும். இஃது, இடப்பக்க முனையில் தொடங்கி, வடப்பக்க முனையை அடைந்து, சென்ற வழியே திரும்பி, மையம் அடைந்து மேலேறி முனையடைந்து, அங்கிருந்து சிலுவையின் அடியடைந்து பாடல் நிறைவுறும்.
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
20.11.2019

Aucun commentaire:

Enregistrer un commentaire