lundi 10 avril 2017

வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]


மலைமகளே!
வஞ்சித்துறை [தேமா + கூவிளம்]
  
1.
அன்னை உன்னடி
என்னைக் காத்திடும்!
முன்னைப் புண்வினை
தன்னை நீக்கிடும்!
  
2.
மஞ்சள் ஆடையில்
நெஞ்சம் சொக்கிடும்!
கொஞ்சும் புன்னகை
தஞ்சம் நல்கிடும்!
  
3.
செம்மை ஆடையே
வெம்மை போக்கிடும்!
அம்மை பார்வையே
எம்மை தாங்கிடும்!
  
4.
பொன்சேர் ஆடையும்
மின்சேர் மாலையும்
என்சேர் வாழ்வினை
இன்சேர் ஆக்கிடும்!
  
5.
பச்சை ஆடையோ
இச்சை ஈந்திடும்!
பொச்சை என்மனம்
பிச்சை ஏந்திடும்!
  
6.
வஞ்சி மேவிடும்
பஞ்சி ஆடையின்
விஞ்சும் பேரெழில்
நெஞ்சுள் நின்றிடும்!
  
7.
சக்தி உன்னுரு
பக்தி ஊட்டிடும்!
புத்தி கூட்டிடும்!
முத்தி காட்டிடும்!
  
8.
தேவி உன்முகம்
ஆவி ஆழ்ந்திடும்!
காவி ஞானியர்
மேவிக் கூத்திடும்!
  
9.
மண்ணும் உன்னருள்!
விண்ணும் உன்னருள்!
தண்ணும் உன்னருள்!
பண்ணும் உன்னருள்!
  
10.
பாடிச் சாற்றினேன்!
ஆடிப் போற்றினேன்!
தேடி நன்மலர்
கோடி சூட்டினேன்!
  
பாட்டரசர் கி. பாரதிதாசன்
தலைவர்:
கம்பன் கழகம் பிரான்சு
உலகத் தொல்காப்பியத் தலைமை மன்றம்
03.04.2017

Aucun commentaire:

Enregistrer un commentaire