lundi 4 mai 2015

அழகின் சிாிப்பு - பகுதி 1



அழகின் சிரிப்பு
(காலையழகு, மாலையழகு, சோலையழகு, சாலையழகு)

தலைமைக் கவிதை

தமிழ் வணக்கம்

மரம்ஆடும்! மலர்ஆடும்! குரங்கைப் போன்று
     மனம்ஆடும்! மதுவருந்தி வண்டும் ஆடும்!
கரம்ஆடும்! கால்ஆடும்! கருத்தும் ஆடும்!
     காற்றாடி போல்வானில் காதல் ஆடும்!
சிரம்ஆடும்! சிலம்பாடும்! சீர்கள் ஆடும்!
     சில்லென்று மயிலாடும்! என்றன் நெஞ்சுள்
வரமாடும் வண்டமிழே விரைந்து வாராய்!
     வளமாடும் வன்கவிகள் நன்றே தாராய்!

இறை வணக்கம்!

நீருண்ட மேகங்கள் நிறைந்தே ஆடும்!
     நெடுமாளின் புட்கொடியும் நெகிழ்ந்தே ஆடும்!
சீருண்ட அடியவர்தம் சிந்தை என்றும்
     திருமாலின் திருவடியில் திளைத்தே ஆடும்!
கூருண்ட விழியழகும், கொஞ்சும் கோதை
     குடிகொண்ட மார்பழகும் கொண்ட தேவே!
தாருண்ட மணமாகத் தமிழுண் டாடத்
     தயாநிதியே! வேங்கடவா! விரைந்தே வாராய்!

அவையடக்கம்

வம்பருக்கும் கொம்பருக்கும் அடங்க மாட்டேன்!
     பணம்வாரிக் கொடுத்தாலும் மடங்க மாட்டேன்!
கும்பருக்கும் கோதையர்க்கும் பணிய மாட்டேன்!
     கொடுங்கோபக் காரருக்கும் குனிய மாட்டேன்!
உம்பருக்கும் செல்வருக்கும் கவிதை பாடி
     ஊன்வாழப் பொருள்நாடித் திரிய மாட்டேன்!
கம்பருக்கும் கண்ணனுக்கும் அடங்கும் நெஞ்சன்
     கவிகேட்கும் உங்கள்முன் அடங்கு கின்றேன்!

வொரெயால் தமிழ்க் கலாச்சார மன்றம்

ஓங்குதமிழ்ச் சங்கமத்தை உள்ளம் ஏந்தி
     உழைத்திட்ட அன்பர்களை வணங்கு கின்றேன்!
தாங்குதமிழ்த் தலைகொண்ட இலங்கை வேந்தன்
     தன்னலமே இல்லாத கிருட்ண ராசு
தேங்குதமிழ்ச் சீர்பரவப் பணிகள் செய்தார்!
     தேசபிதா காந்திக்குப் படிமம் வைத்தார்!
வீங்குதமிழ் நெஞ்சுடனே பத்தாம் ஆண்டின்
     வெற்றிக்கு உழைத்தவரைப் போற்று கின்றேன்!

பாவேந்தர் தமிழ்அழகின் சிரிப்பைப் பாடிப்
     பாவலர்தம் உள்ளத்துள் குடி புகுந்தார்!
மாவேந்தர் அந்நாளில் தமிழ்த்தாய் கொண்ட
     மாண்பழகின் சிரிப்போங்க ஆட்சி செய்தார்!
நாவேந்தர் இந்நாளில் தமிழின் தொன்மை
     நலமழகின் சிரிப்புரைத்து நற்பேர் பெற்றார்!
பூவேந்தும் சிரிப்பழகாய்ப் புவியில் யானும்
     புகழேந்தும் புலமையினைப் போற்றி வாழ்வேன்!

விடியலுறும் சிரிப்பழகைச் செவ்வான் காட்டும்!
     விழிகளுறும் சிரிப்பழகைக் காதல் தீட்டும்!
செடிகளுறும் சிரிப்பழகைப் பூக்கள் சூட்டும்!
     செந்தமிழின் சிரிப்பழகைப் பாக்கள் மீட்டும்!
வெடிகளும் சிரிப்பழகை வானில் மேவும்
     விந்தைமிகு மத்தாப்புச் சரங்கள் கூட்டும்!
குடிகளுறும் சிரிப்பழகைச் செங்கோல் நாட்டும்!
     குழந்தைகளின் சிரிப்பழகே அழகின் உச்சம்!

குளத்துக்கு மரையழகு! செங்கண் கொண்ட
     குயிலுக்குக் குரலழகு! குவிந்த செல்வ
வளத்திற்குக் கொடையழகு! தோன்றி யுள்ள
     வாழ்வுக்குப் புகழ்அழகு! வாய்த்த நம்மின்
உளத்திற்கு நல்லொழுக்கம் அழகு! எந்த
     உலகுக்கும் ஒற்றுமையே அழகு! கோயில்
தளத்திற்குச் சிற்பங்கள் அழகு! ஈடில்
     தமிழுக்குத் தொன்மரபே அழகாம் என்பேன்!

கண்ணுக்கு அவள்..அழகு! இன்பம் ஊட்டும்
     கவிதைக்கு நான்..அழகு! பசுமை பொங்கும்
மண்ணுக்கு வயலழகு! தோகை மின்னும்
     மயிலுக்கு நடமழகு! மயக்கும் மாலை
விண்ணுக்கு நிலவழகு! வெற்றி பெற்ற
     வீரர்க்கு நடையழகு! இளமை பூத்த
பெண்ணுக்கு இடுப்பழகு! மொழிகள் தம்முள்
     பெருந்தமிழே பேரழகு வாய்த்த தென்பேன்!

பொற்குழம்பைத் தடவுமொளி அழகு! பூத்த
     பூவழகு! புறாவழகு! அன்பை இட்டு
நற்குழப்பை ஊட்டும்தாய் அழகு! அன்ன
     நடை..அழகு! நல்லார்நட்பு அழகு! நன்றே
முற்றுடம்பைப் பெற்றகனி அழகு! துள்ளும்
     முயல்அழகு! கயல்அழகு! தமிழை நாளும்
கற்றுடம்பை வளர்த்திட்டால் வாழ்க்கைப் பாதை
     கண்கவரும் சோலையென அழகை மேவும்! 

[தொடரும்]

38 commentaires:

  1. மிக மிக அழகான பதிவு. அழகின் சிரிப்பை ரசித்தோம், நல்ல கவிதை வரிகளில்.
    ஆய்வு தொடர்பான எனது அண்மைப்பதிவைக் காண வருக http://ponnibuddha.blogspot.com/2015/05/blog-post_3.html

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      அழகின் பதிவென்று அளித்த கருத்தோ
      ஒழுகும் மதுவை உடைத்து!

      Supprimer
  2. ஒவ்வொரு வரியும் அழகோ அழகு ஐயா...

    ரசித்தேன் பலமுறை...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓங்கி ஒளிரும் உயர்தமிழை எந்நாளும்
      தாங்கி ஒளிரும் தலை!

      Supprimer
  3. இமயத்திலிருந்து வரும் கங்கை நதி போல் அல்லவா
    இக்கவிதை தங்கள் இதயத்தில் இருந்து பொங்கி வருகிறது !!!

    இந்தோள ராகத்திலே மெட்டு இட்டு,
    இன்று நீவிர் துதி பாடும்
    ஈசன் வேங்கடவன் பாதங்களில் அர்ப்பணிப்பேன்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthathacomments.blogspot.in

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சுப்பென்னும் தாத்தா தொடரும் இசைப்பணியை
      இப்புவி போற்றும் இசைத்து!

      Supprimer
  4. சொல்லழகும் பொருளழகும் வியக்க வைக்கிறது ஐயா!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொல்லழகும் துாய பொருளழகும் மின்னுதமிழ்
      எல்லழகும் ஈடோ இதற்கு!

      Supprimer
  5. தொடரட்டும் அழகுகள்......அய்யா......ரசிக்கிறேன் கவிதை அழகுகளை அய்யா........த.ம.1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சூட்டி மகிழ்ந்தேன் சுவைக்கும் கவிதைகளை!
      ஈட்டி மகிழ்ந்தேன் எழில்!

      Supprimer
  6. பாவேந்தர் பாட்டழகு பாரதி தாசனார்
    நாவடிக்கும் நற்றமிழை நாடு.
    எந்த அழகையும் விடாது கோர்த்த பாமாலை அழகு.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பூ..வடிக்கும் தேனைப் புனைகின்ற என்னுடைய
      பா..வடிக்கும் என்றே பகர்!

      Supprimer
  7. பாடல் வரிதோறும் அழகின் சிரிப்பு! அதுதானே உங்கள் சிறப்பு!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாடல் அடிகளைப் பாடும் பொழுதெல்லாம்
      ஆடல் புாியும் அழகு!

      Supprimer
  8. வணக்கம்
    ஐயா.

    ஒவ்வொரு வரிகளும் மிக அழகாக உள்ளது படித்து மகிழ்ந்தேன் பகிர்வுக்கு நன்றி த.ம 11

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஒவ்வொரு பாவும் ஒளிரும் மலரென
      செவ்விதழ் காட்டும் சிவந்து!

      Supprimer
  9. சிறந்த பாவரிகள்
    சிந்திக்கவைக்கிறது
    தொடருங்கள்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சிந்தனை துாண்டும் செழுந்தமிழைத் தந்துள்ளேன்!
      வந்தனை செய்வீர் மகிழ்ந்து!


      Supprimer
  10. எல்லா வழகும் இனிதே எடுத்தியம்பி
    கல்லாத மாந்தரும் கற்றுணர்ந்து சொக்கிடவே
    சொல்நயம் மிக்கபாவும் பைந்தமிழும் கோர்த்தளித்தீர்
    வல்லகவி வாழவென் வாழ்த்து !

    அனைத்தும் அழகு வாழ்த்துக்கள் ...!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      சொன்னயம் மிக்க சுடர்க்கவி கண்டுவந்தீர்!
      நன்னயம் மிக்க நடையென்றீர்! - என்றனுக்குப்
      பொன்னயம் மிக்க புகழ்நயம் பூத்தளித்தீர்!
      இன்னயம் மிக்க இசைத்து!

      Supprimer

  11. Kavingnar Pasupathy Pachu அழகி சிரிப்பு கவியரங்கக் படித்து பெரிதும் இன்புற்றேன். ஓசை நயத்தையும் மரபின் ஒழுக்கத்தையும் கண்டு வியந்து மகிழ்ந்தேன். தொடர்ச்சிக்கு காத்திருக்கிறேன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      ஓசை நயம்உணர்ந்து ஓதிய உன்கருத்து
      ஆசை அளிக்கும் அகத்து!

      Supprimer

  12. Munisamy Balasubramanian மரபுப் பாட்டினிலே மனமிழந்தேன் மகாகவியே! வரமாகவந்தவன்நீ புதுவை மண்ணுக்கு

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தரமாகப் பாடுகின்ற தன்மையைத் தாயின்
      வரமாகப் பெற்றதென் வாழ்வு

      Supprimer

  13. Naseema Bhanu தமிழை நாளும் கற்றுடம்பை வளர்த்திட்டால்
    வாழ்க்கைப்பாதை கண்கவரும் சோலையென
    அழகை மேவும். சரியான செய்தி

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தாயின் திருவடியைத் தாழ்பணிந்து நாம்மகிழ்ந்தால்
      கோயில் இனியேனோ கூறு?

      Supprimer

  14. கதிர் மதி .அற்புதமான கவித்துவச் சொல்லாடல். கவிதையும் அழகின் சிரிப்பாக எழிலூட்டுகிறது. வாழ்த்துக்கள்.

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      நல்லாடல் காட்சியென நல்லதமிழ்ப் பாட்டினில்
      சொல்லாடல் ஆட்சியெனச் சொல்லு!

      Supprimer

  15. Louis Fathima Xavier S உங்கள் கவிதையை படிக்கும் பொழுது..
    கண் குளிர்ந்து...வாய் மனத்தது...
    செவி இனித்தது...
    உடலெல்லாம் தமிழ் பரவி...
    உள்ளே சிலிர்த்தது...

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      செவியினிக்கும்! கண்குளிரும்! செந்தமிழில் செய்த
      கவியினிக்கும் காதல் கமழ்ந்து!

      Supprimer

  16. Murugaiya Thalinjan கவிதைக் காட்டும் நயம் அற்புதம் !! வாழ்த்துக்கள் கம்பன் கழக கவிஞர்களுக்கு !!

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      தளிஞ்சை முருகையன் தந்த கருத்து
      விளைந்த கரும்பாம் விருந்து!

      Supprimer

  17. Asokan Radjou கன்னிதமிழின் கன்னத்தில் !குழியொன்று கண்டேன் உன் கவிதையாக . வாழ்க வளமுடன்

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      கன்னித் தமிழழகு கன்னத்தின் புன்சிரிப்பு
      மின்னும் அழகின் விரிப்பு!

      Supprimer
  18. முக்கனிச் சாறையும் மூக்குமுட்டக் குடித்ததுபோல் இருக்கு !
    அருமை அருமை கவிஞர் அண்ணா வாழ்க வளமுடன் !

    தம +1

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      முக்கனிச் சாறுண்டீர் மூச்சியினை முட்டிடவே!
      இக்கவிக் கில்லை இணை!

      Supprimer
  19. பாட்டரங்கைக் கேட்டுப் பயனுற்றேன்! இன்பத்தின்
    கூட்டரங்கைக் கேட்டுக் குளிருற்றேன்! - நாட்டரங்கில்
    வண்ணத் தமிழ்பரப்பும் வல்ல கவியரசே!
    உண்ணக் கவிகளை ஓது

    RépondreSupprimer
    Réponses

    1. வணக்கம்!

      பாட்டரங்கம்! கன்னல் பழவரங்கம்! இன்பத்தின்
      கூட்டரங்கம்! கொள்கை குவியரங்கம்! - நீட்டுபுகழ்
      ஈட்டரங்கம்! ஈடில் எழிலரங்கம்! இன்றேனை
      ஊட்டரங்கம் என்பேன் உணர்ந்து!

      Supprimer