jeudi 26 juin 2014

வஞ்சித்துறை




வஞ்சித்துறை - 1

கண்ணைக் கைகளால்
புண்ணாய்ச் செய்வரோ?
பெண்ணை அடிமையாய்
மண்ணில் கொள்வதோ?

தேமா+விளம், நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 2

பிறந்த பிள்ளை
சிறந்த கல்வி
நிறைந்து நாளும்
அறிந்து வாழ்க

புளிமா+தேமா, நான்கடிகளும் ஓரெதுகை.

வஞ்சித்துறை - 3

பூவளர் தமிழை
ஆவலாய்க் கற்று
நாவல மிக்க
பாவலன் ஆனேன்

கூவிளம்+மா, நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 4

கற்றவர் போற்ற
சொற்றிற மிக்க
நற்றமிழ்த் தேனைப்
பற்றுடன் உண்க!

கூவிளம்+தேமா, நான்கடிகளும் ஓரெதுகை, 

வஞ்சித்துறை - 5

வெல்லுந் திறத்தாலே
கல்லுங் கலையாகும்
சொல்லுஞ் செயலானால்
செல்லும் இடமோங்கும்

தேமா+காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 6

பெற்றவர் மகிழ்ந்திடவே
கற்றவர் வழிநடப்பாய்!
உற்றவர் உவந்திடவே
மற்றவர்க்(கு) உதவிடுவாய்

கூவிளம்+காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 7

பழகு தமிழ்போலே
அழகு மொழியுண்டோ?
உழவு செழித்தாலே
நிழலும் மகிழாதோ?

புளிமா+புளிமாங்காய், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 8

செந்தமிழ்மொழி ஒன்றையே
சிந்தையில்நினை என்றுமே!
வந்தவர்மொழி சூழினும்
நந்தமிழ்க்கென வாழ்கவே!

கூவிளங்கனி+விளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 9

தூய்மொழிதமிழ் அமிழ்தினைச்
சேய்களுக்குநீ அளித்திடு!
தாய்மொழிதமிழ் பருகிட
வாய்வழிதனில் கசக்குமோ?

கூவிளங்கனி+கருவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 10

திருக்குறள்நெறி ஒன்றுதான்
கருகொளச்செயும் அன்பினை!
நெருப்பெனச்சுடும் தீமையை!
உருப்படச்செயும் வாழ்வினை!

கருவிளங்கனி+கூவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 11

பன்மொழிகளில் ஈடிலா
என்தமிழ்மொழி என்றுதான்
தன்தலைதனைத் தூக்குமோ?
என்மனம்அலை கின்றதே!

கூவிளங்கனி+கூவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

வஞ்சித்துறை - 12

அருளுடையவர் பெருகவும்
பொருளடையவர் பொலியவும்
தெருளுடையவர் திகழவும்
திருஅருள்துணை புரிகவே!

கருவிளங்கனி+கருவிளம், நான்கடிகளும் ஓரெதுகை,

15-07-2004

10 commentaires:

  1. அற்புதமான கவிதைகள் மூலம்
    அருமையாக எளிமையாக
    வஞ்சித் துறையைக் கற்பித்தது
    மிக மிக அருமை
    பகிர்வுக்கு மிக்க நன்றி

    RépondreSupprimer
  2. வஞ்சித்துறை - 10 சிறப்பு உட்பட அனைத்தும் அருமை ஐயா...

    வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  3. வணக்கம்
    ஐயா

    தூயதமிழ் கண்டு என் அகம்மகிழ்ந்தது. பகிர்வுக்கு நன்றி ஐயா
    த.ம 5வது வாக்கு
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    RépondreSupprimer
  4. வணக்கம் ஐயா!

    பாப்புனைய வேண்டிப் பகலிரவாய் ஏங்கவே
    யாப்பிலக்க ணம்தந்தீர் ஆய்ந்து!

    எங்கள் ஏக்கத்திற்கு இன்று நல்லதொரு பதிவாக
    யாப்பிலக்கணத்தில் சிறிதளவு தந்துள்ளமை கண்டு
    மிக்க மகிழ்வெய்துகிறேன்!

    மனமுவந்த நன்றியுடன் வாழ்த்துக்களும் ஐயா!

    RépondreSupprimer
  5. "தூய்மொழிதமிழ் அமிழ்தினைச்
    சேய்களுக்குநீ அளித்திடு!
    தாய்மொழிதமிழ் பருகிட
    வாய்வழிதனில் கசக்குமோ?" என்ற
    பாவை நான் விரும்புகிறேன்!
    சிறந்த பதிவு!

    RépondreSupprimer
  6. எளிமையான வரிகள் ஓரெதுகையில் அமைந்த வஞ்சித்துறை ..

    அழகும் அறிவும்
    செழுமையும் மிக்கதாய்

    RépondreSupprimer
  7. ஐயா வணக்கம்!

    வஞ்சித்துறை இலக்கணப் பதிவு அருமை!
    அடிப்படைக் கவி இலக்கணம் கற்க நானும் ஆவலாக உள்ளேன்.
    ஆகையால் தொடர்ந்து கற்கும் வகையில் அவற்றையும் தாருங்கள்.

    வாழ்த்துக்கள் கவிஞரையா!

    RépondreSupprimer
  8. 1)நீடு வாழிய!
    நீடு வாழிய!!
    பாடு செந்தமி
    ழோடு வாழிய!!!

    2) ( இது புளிமா + விளம் என்று உள்ளது. எடுத்துக்காட்டு புளிமா + தேமா என உள்ளது )
    மனமும் மலரென
    தினமும் அலர்ந்திடு
    கனவின் கருத்தெலாம்
    நனவென் றாகுதே!
    3) & 4) கூரிய சிந்தை
    நேரிய பார்வை
    வீரிய வார்த்தை
    சேரிடம் இங்கே!
    5) கல்லும் கவிபாடச்
    செல்லும் வழியாவும்,
    ஒல்லும் வகைசெய்யும்
    நல்லன் எனநின்றீர்!

    வஞ்சித்துறை வாக்கு
    நெஞ்சில்இத மாகக்
    கொஞ்சுந்தமிழ் செய்தீர்!
    மிஞ்ச‘எவர் உண்டு?
    நன்றி!

    RépondreSupprimer
    Réponses
    1. “நனவென் றிணையுமே“ என்றிருக்க வேண்டும் ஐயா!

      Supprimer