lundi 22 juillet 2013

காதல் ஆயிரம் [பகுதி - 107]




காதல் ஆயிரம் [பகுதி - 107]
 
916.
அல்லி மலரே! அரும்பாலே! வெண்முத்தே!
சொல்லிச் சுவைக்கின்ற வெண்பாவே! - மல்லிகையே!
வெள்ளை மனத்தவளே! வெண்ணிலவே! உன்னழகில்
கொள்ளை கொடுத்தேங்கும் கொக்கு!

917.
மூத்தாடும் ஆசையினால் முன்னூறு முத்தங்கள்
கூத்தாடும் நெஞ்சுள்! குழலிசையே! - பூத்தாடும்
காட்டுக்குள் நாமிணைந்த காட்சி! குருவிகள்
கூட்டுக்குள் கூடும் குளிர்ந்து!

918.
மேகம் திரண்ட கருங்குழலி! விந்தையிடும்
மோகம் திரண்ட விழியழகி! - தேகத்தில்
தாகம் திரண்ட தவிப்புற்று நற்கருமைக்
காகம் கரையும் கனத்து!

919.
பா..நடக்கும் பாங்காய்! பசுந்தமிழ்ச் சொல்லேந்தி
நா..நடக்கும் பாங்காய் நலத்தவளே! - நீ..நடக்கும்
மின்னும் நடையை வியந்தெண்ணி ஆசையனால்
அன்னம் நடக்கும் அசைந்து!

920.
இயக்கும் விசையே! இனியவளே! உன்னை
மயக்கும் கவியால் மடக்க! - வியந்தே
விரிக்கும் வலைகண்டு விண்ணில் பறந்து
சிரிக்கும் சிறியதேன் சிட்டு!

(தொடரும்)

7 commentaires:

  1. அருமை அருமை மிகஅருமை! பாக்கள்
    பெருமை கொடுக்கும்!நற் பேறு!

    RépondreSupprimer
  2. அழகிய பறவைகள் அமர்ந்த பாட்டு
    பழகிடப் பயன்மிகு பண்ணிசை போட்டு
    மகிழ்வொடு மனமும் உவகைக் கூட்டு
    முகிழ்த்தது மெதுவாய் முல்லைக் காடு!

    RépondreSupprimer
  3. என்னவெனச் சொல்வது ஐயா!...
    புள்ளினங்கள்கூட உங்கள் கவியிலே அள்ளுகின்றனவே எங்கள் உளங்களை...

    ரொம்பவே ரசிக்கின்றேன். வாழ்த்துக்கள்!

    RépondreSupprimer
  4. ஒவ்வொரு வரியையும் வியந்து கொண்டே ரசிக்கிறேன் ஐயா... வாழ்த்துக்கள்...

    RépondreSupprimer
  5. பா..நடக்கும் பாங்காய்! பசுந்தமிழ்ச் சொல்லேந்தி
    நா..நடக்கும் பாங்காய் நலத்தவளே! - நீ..நடக்கும்
    மின்னும் நடையை வியந்தெண்ணி ஆசையனால்
    அன்னம் நடக்கும் அசைந்து!

    RépondreSupprimer

  6. பறவையுடன் பாடிப் பறந்த கவிதை
    நிறைவுடன் நிற்கும் மனத்துள்! - சிறப்புடன்
    தந்தபுகழ் வெண்பாக்கள்! தங்குபுகழ் தண்பாக்கள்!
    முந்துபுகழ் யாவும் மொழிந்து!

    RépondreSupprimer