jeudi 6 septembre 2012

நல்லதமிழ் [பகுதி - 1]




கிருட்டிணன் - கிருட்டினன்

            மேலுள்ள சொற்களில் எது பிழையானது? எது சரியானது? 'க்ருஷ்ண' என்ற ஆரியச் சொல்லைத் தமிழில் ''கிருட்டினன்'' என்று எழுதுவதே மரபு. வடவெழுத்தோடு எழுதுவோர் கிருஷ்ணன் என்று முச்சுழி போடுவர். ''கர்ணன்'' என்பது தமிழிற் கன்னன் என்றே வரும். முத்துக்கிருட்டினன், கோபாலகிருட்டின பாரதி என்ற வழக்குகளைக் காண்க. கருநாகத்தைக் குறிக்கும் ''க்ருஷ்ணசர்ப்பம்'' தமிழில் கிருட்டினசர்ப்பம் என்றும், ''க்ருஷ்ணவேணி' என்பது கிருட்டினவேணி என எழுதப்படும் (கன்னன் - கர்ணன் ) ( கண்ணன் - திருமால்)

கற்புரம் - கற்பூரம் - கருப்பூரம்

            கற்புரம் என்று எழுதுவது தவறாகும்.  ''கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ'' என்று ஆண்டாள் திருமாலைப் போற்றிப் பாடுகிறாள். ''கற்பூரம் நாறும் கலைசையே'' கலைசைச் சிலேடை வெண்பாவில் இத்தொடர் உள்ளது. கருப்பூரம் என்றும் கற்பூரம் என்றும் எழுதுவது சரியே. ஆனால் கருப்பூரம் என்று எழுதுவதே நன்று.

சுவற்றில் எழுதாதே - சுவரில் எழுதாதே

            சுவரில் எழுதாதே என்று எழுதுவதே சரியான தொடா,; (சுவர் - இல் - சுவரில்) சுவற்றில் என்று எழுதினால் வறண்டுபோன இடத்தில் என்பது பொருளாகும்.

ஒரு ஆடு - ஓர் ஆடு

            ஒன்று என்பது ஒரு எனத்திரிந்த நிலையில், வருமொழியில் உயிரெழுத்துக்களும் யகர ஆகாரமும் முதலாகிய சொற்கள் வந்தால், ஒரு என்பதில் ஒகரம் ஓகாரமாகும். ''ரு'' என்பதன் கண் உள்ள உகரம் கெட ஒரு என்பது ஓர் என்று ஆகும்
           
            'அதனிலை உயிர்க்கும் யாவரு காலை
            முதனிலை ஒகரம் ஆகும்மே
            ரகரத்து உகரம் துவரக் கெடுமே'
                                    (தொல் . . 479)

எனவே ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற்போல்வனவே வழா நிலையாம் .

பன்னிரு ஆழ்வார்கள் - ஆழ்வார்கள் பன்னிருவர்

            பன்னிரு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள் என்றாற்போல வருவன யாவும் வழூஉத் தொடர்களாம். உயர்திணைப் பெயர்களுக்குப் பின்னே எண் பெயர்கள் வர வேண்டும். ஆழ்வார்கள் பன்னிருவர், நாயன்மார்கள் அறுபத்து மூவர் என்றாற்போல வருவன வழா நிலையாம்.

ஓர் அரசன் - அரசன் ஒருவன்

            ஒரு என்ற சொல்  உயிரெழுத்துக்களுக்கு முன்னும், யகர ஆகாரம் முன்னும், ஓர் என்று ஆகுமெனக் கண்டோம், இக்கருத்தின்படி ஓர் ஆடு, ஓர் இரவு, ஓர் யானை என்றாற் போல்வனவே வழா நிலையாம். ஆனால் உயர்திணைப் பெயர்களுக்கு முன்னே எண் பெயர் வாராது. ஓர் அரசன் என்று எழுதுவது வழுஉத் தொடராகும், அரசன் ஒருவன் எனறு எழுதுவதே வழா நிலையாம்.

பல அரசர் -பலர் அரசர் - அரசர் பலர்

            பல அரசர், சில அரசர் என்றாற்போல வருவனவற்றை பலர் அரசர், சிலர் அரசர் என்பனவற்றின் திரிபாகக் கொள்பர் உரையாசிரியர்கள். எனவே இவற்றையும் அரசர் பலா,; அரசர் சிலர் என்று எழுதுவதே முறையாகும்.
                                                                                                                                           (தொடரும்)

உன்னாசை கொண்டு




எடுப்பு

இந்திர லோகத்து முல்லை - இவள்
இன்பத்துக் கேதிங்காம் எல்லை!
                             
தொகுப்பு

மந்திர விழிகளின் தொல்லை - என்
மயக்கமே தீர்ந்திட வில்லை!
                    
முடிப்பு

பூக்களைப் பூத்திடும் சோலை - இந்தப்
பொன்மகள் அணிந்திடும் சேலை!
பாக்களை நெய்திடும் ஆலை - இவள்
பட்டுடல் கவிநிறை சாலை!
                            


சிறப்பினைத் தந்திடும் தொண்டு - ஆம்
திகைத்திட்டேன் இவளிடம் கண்டு
பிறப்பினில் பலவகை யுண்டு - நான்
பிறந்திட்டேன் இவளாசை கொண்டு
     

mardi 4 septembre 2012

வாழ்வுண்டோ?




மண்ணை இழந்து மனையைத் துறந்து
               வருந்தியும் வாழ்வுண்டு!
பொன்னை இழந்து பொருளைத் துறந்து
               புழுங்கியும் வாழ்வுண்டு!
கண்ணை இழந்து கருத்துச் சிதைந்து
               கலங்கியும் வாழ்வுண்டு!
உன்னை இழந்தால் தமிழே உலகில்
               ஒருநொடி வாழ்வுண்டோ?

இன்பத் தமிழே! இயக்கும் இறையே!
               இனிமை படைத்தவளே!
துன்பப் பொழுதில் துணிவைக் கொடுத்துக்
               துயரைத் துடைத்தவளே!
அன்பாம் நெறியை அமிழ்தாம் சுவையை
               அளிக்கும் அருந்தமிழே!
உன்றன் புகழை உலகில் பரப்ப
               ஒருநாள் மறவேனோ!

ஒன்றே குலமாம்! ஒருவனே தேவாம்!
               உயர்மிகு நன்மொழியை
அன்றே அளித்த அருமைத் தமிழே!
               அழகொளிர் பூக்காடே!
நன்றே புரியவும் நன்மைகள் செய்யவும்
               நல்லருள் செய்வாயே!
என்றும் என்கை எழுதும் எழுத்தில்
               இருந்து மகிழ்வாயே!

முல்லை மலர்தனில் மொய்த்திடும் வண்டென
               மோகமே கொண்டேனே!
கொள்ளை கொடுத்துக் குலவும் அழகினில்
               கொஞ்சியே நின்றேனே!
எல்லை இலதோர் புகழில் கமழும்
               எனதுயிர்ச் செந்தமிழே!
பிள்ளை புரியும் பிழைகள் கலைத்துப்
               பெருமையைத் தந்தருளே!

குடிக்கக் குடிக்கத் திகட்டா மதுவைக்
               கொடுக்கும் தெளிதமிழே!
வடிக்க வடிக்க வளமாய்ப் பெருகி
               மணக்கும் வளர்தமிழே!
தொடுக்கத் தொடுக்க மனத்தை மயக்கிச்
               சுடரும் உயர்தமிழே!
எடுக்க எடுக்கச் சுரக்கும் இனிய
               எழில்தமிழ் வாழியவே!

காலத்தை வென்றவன் கம்பன்




திருராம கதைபாடி
அருண்ஞான மதிசூடி
உருவான புகழ்த்தமிழ்க் கம்பா! - தமிழ்க்
கருவாக மிளிருதே உன் பா!

என்றுமுள தமிழ்ச்சீரை
இயம்பியதால் நற்பேரை
வென்றதுவே கம்பதிரு வுள்ளம்! - தமிழ்
நின்றுதழைத் தொளிர்ந்தவுயர் இல்லம்!

திருராமன் வில்லழகும்
சீதையவள் சொல்லழகும்
பெரும்பயனை நல்குமெனப் பாடி - கம்பன்
பெயர்பெற்றான் பூந்தமிழைச் சூடி

ஞாலத்தை உட்கொண்டு
ஞானத்தின் வழிகண்டு
காலத்தை வென்றவனே கம்பன் - அவன்போல்
கவியெழுத இல்லையெரு கொம்பன்

கால்வண்ணம் கைவண்ணம்
கவிவண்ணம் கண்டவனாம்
பால்வண்ண நெஞ்சுடைய கம்பன்! - உயர்
பாவலர்தம் மனம்வாழும் அன்பன்!

தந்தைமொழி தட்டாமல்
சிந்தையுள இராமனவன்
தந்தமொழி நன்மைதரும் என்பேன் - நாளும்
சந்தமுடன் பாடியதை உண்பேன்!

தோள்கண்டார் தோள்காண
தாள்கண்டார் தாள்காண
சீர்கொண்ட இராமனவன் உருவம்! - கண்டால்
பேர்கொண்ட வாழ்வுநமைத் தழுவும்

வல்லதமிழ் வாணரெலாம்
சொல்லிமகிழ் காவியத்தை
அள்ளிமனம் பருகுவதைப் பாரு! - இங்கு
அதற்கிணை உண்டோநீ கூறு!

dimanche 2 septembre 2012

குளிர்தமிழ் நிலையம் மு.வ




எடுப்பு

சிந்தனைச் செல்வர் முனைவர் மு.! - அவர்
சீரினைச் செப்பத் தமிழே நீ..வா!
                                                                                                (சிந்தனைச்)
தொடுப்பு

வந்தனை செய்வோம்! குயிலே கூவாய்! - அவர்
வண்டமிழ் உண்போம் இனிக்கும் பாவாய்!
                                                                                                (சிந்தனைச்)
முடிப்பு

மாணவர் மனங்களில் மகிழ்வுற வாழ்பவர்! - என்றும்
மாண்புடைக் குறள்வழி மணமுற ஆள்பவர்!
தேனமர் இயற்கையைத் தெளிவுற ஆய்ந்தவர்! - இன்பத்
தென்மொழித் தொன்மையுள் திறமுறத் தோய்ந்தவர்!
                                                                                                (சிந்தனைச்)

தமிழரின் அருமையைத் தழைத்திடக் காட்டினார்! - நன்றே
தன்மொழிப் பெருமையைச் சிறந்திடத் தீட்டினார்!
அமிழ்தென இனிமையை அருந்திடச் சூட்டினார்! - வென்றே
ஆய்வினில் புதுமையை அழகுடன் பூட்டினார்!
                                                                                                (சிந்தனைச்)

படித்திடப் படித்திடப் பயன்பல விளையுமே! - மு.
படைத்தவை நமதினப் பகைவரைக் களையுமே!
குடித்திடக் குடித்திட மனமகிழ்ந் தலையுமே! - மு.
கொடுத்தவை கொழித்திடும் குளிர்தமிழ் நிலையமே!
                                                                                                (சிந்தனைச்)