dimanche 31 août 2025

ஓரொலி வெண்டுறை

 

மூன்றடி ஓரொலி வெண்டுறை

 

பரசிருக்கும் தமிழ்மூவர் பாட்டிருக்கும் திருமன்றில்

        பரசொன் றேந்தி

அரசிருக்கும் பெருமானார்க்[கு] ஆட்செய்யர் என்செய்வார்

முரசிருக்கும் படைநமனார் முன்னாகும் அந்நாளே

                                                  [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

 

பொன்னேந்திப் பொருளேந்திப் புவிபோற்றும்

புகழேந்திப் பூத்த வாழ்வு

துன்பேந்திக் கிடக்கிறது! துணையின்றித் தவிக்கிறது!

அன்பேந்தி அணைத்தவளே! அழவைத்துப் போனதுமேன்?

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

     
           இவை முதலடி அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையை வந்த ஓரொலி வெண்டுறை.

நான்கடி  ஓரொலி வெண்டுறை

 

படர்தரும்வெவ் வினைத்தொடர்பால் பவத்தொடப்பப்

        பவத்தொடர்பால் படரா நிற்கும்

விடலரும்வெவ் வினைத்தொடர்பவ் வினைத்தொடர்புக்கு

        ஒழிப்புண்டே வினையேல் கம்மா

விடர்பெரிது முடையேன்மற் றென்செய்கேன் என்செய்கேன்

அடலரவ மரைக்கசைத்த அடிகேளோ அடிகேளோ

                         [சிதம்பரச் செய்யுட்கோவை மேற்கோள்]

        இது நான்கடியாய், முதலடியிரண்டும் அறுசீராய் ஏனையடி நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய கலித்தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஐந்தடி ஓரொலி வெண்டுறை

 

வெறியுறு கமழ்கண்ணி வேந்தர்கட் காயினும்

உறவுற வருவழி உரைப்பன உரைப்பன்மன்

செறிவுறும் எழிலினர் சிறந்தவர் இவர்நமக்கு

அறிவுறு தொழிலரென் றல்லவை சொல்லன்மின்

பிறபிற நிகழ்வன பின்

                         [யாப்பருங்கல விருத்தி மேற்கோள் பாடல்]

 

திருமுகம் எனதுயிர் ஏட்டினில் மின்னும் மின்னும்

அருமகம் நினைவினை அழகுடன் பின்னும் பின்னும்

பெருமகம் உடையவள் பிரிந்தெனைச் சென்றாள்!

கருமகம் நிலையென இருமகம் இருளும்!

செருவகம் புரிந்திடச் செல்லகம் பூக்கும்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        முதல் பாடல் ஐந்தடியாய் ஈற்றடி ஒன்று ஒரு சீர் குறைந்து அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையால் வந்த ஓரொலி வெண்டுறை. இதில் கமழ்கண்ணி என்ற  காய்ச்சீரை விளச்சீர் ஓசையாகக் கொள்ளுதல் முன்னோர் மரபு. அஃதாவது கருவிளம் வர வேண்டுமிடத்தில் புளிமாங்காய் வரும். கூவிளம் வரவேண்டுமிடத்தில் தேமாங்காய் வரும். இவை ஒற்று நீ்ங்க எண்ணப்படும் எழுத்தெண்ணிக்கையில் ஒத்த சீர்களாதலின் இவ்வமைதியைச் சான்றோர் ஏற்றனர். இதனைத் [தொல்காப்பியரும் வெண்சீர் ஈற்றசை நிரையசை இயற்றே - தொல். செய் 29]  என்ற நுாற்பாவால் விளக்கியுள்ளார்.

 

        இரண்டாம் பாடல் ஐந்தடியாய், முன்னிரண்டு அடிகள் ஐஞ்சீர் பெற்று, ஈற்று மூவடிகள் நான்கு சீர் பெற்று அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய நிரையொன்றாசிரியத் தளையால் வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஆறடி  ஓரொலி வெண்டுறை

 

ஓரொலி வெண்டுறை ஓதி உணர்த்திடவே 

        வேல்கொண்டு வாராய்!

தாரொளி வெண்டுறைத் தாளம் தவழ்ந்திடவே

        தமிழ்கொண்டு வாராய்!

சீரொலி வெண்டுறை செப்பிக் களித்திடவே

        தேர்கொண்டு வாராய்!

பேரொளி வெண்டுறை பேணிப் புனைந்திடவே

        நார்கொண்டு வாராய்!

ஏரொளி வெண்டுறை என்றன் முருகா..வுன்

பாரொளிப் பாரதி தாசன் படைத்தனனே!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

இது ஆறடியாய், முன் நான்கு அடிகள் அறுசீராய்ப் பின் இரண்டடிகள் நாற்சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய இயற்சீர் வெண்டளையைப் பெற்று வந்த ஓரொலி வெண்டுறை.

 

ஏழடி ஓரொலி வெண்டுறை

 

கன்னல் தமிழே! கம்பன் அமுதே!

        கருணை பொழிந்திடுவாய்!

மின்னல் தமிழே! மீட்டும் இசையே!

        மேன்மை விளைத்திடுவாய்!

இன்னல் துடைத்தே இன்பம் கொடுத்தே

        என்றும் காத்திடுவாய்!

பின்னல் கலையாய்ப் பினையும் கவியைப்

        பேணிக் கூத்திடுவாய்!

நன்னல் மனத்தால் நலியும் என்னை

        நாளும் அணைத்திடுவாய்!

மன்னல் புகழை மன்றில் வாரி அளித்திடுவாய்!

மன்னர் கவியாம் மண்ணை யாள வரந்தருவாய்!

                         [பாட்டரசர் கி. பாரதிதாசன்] 31.08.2025

 

        இது ஏழடியாய், முன் ஐந்தடிகள் அறுசீராய்ப் பின் இரண்டடிகள் ஐந்து சீராய் அடிதோறும் முதல் இருசீர்கள் சிறப்புடைய இயற்சீர் வெண்டளையைப் பெற்று வந்த ஓரொலி வெண்டுறை.

 

பாட்டரசர் கி. பாரதிதாசன்

31.08.2025

Aucun commentaire:

Enregistrer un commentaire